SBI: எஸ்பிஐ வட்டி விகித மாற்றம் இன்று அமல்.. மூத்த குடிமக்களுக்கு இப்படி ஒரு பாதிப்பா.?!
ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், எஸ்பிஐ வங்கி செய்துள்ள வட்டி விகித மாற்றங்கள் இன்று அமலுக்கு வருகின்றன. அது, மூத்த குடிமக்களுக்கு சற்று பாதிப்பாகவே அமைந்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த வாரம் நடத்திய நாணய கொள்கைக்குழு கூட்டத்தில், ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6%-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்திருந்தார். இந்த நிலையில், புதிய வட்டி விகிதத்தை இன்று அமல்படுத்தியுள்ளது எஸ்பிஐ வங்கி. இதில், மூத்த குடிமக்களுக்கு சில பாதிப்புகளும் உள்ளன. அது என்னவென்று பார்க்கலாம்.
வீடு, வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு நற்செய்தி
இந்த வட்டி விகித மாற்றம், வீடு, வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியை குறைப்பதாக எஸ்பிஐ உள்ளிட்ட 3 வங்கிகள் அறிவித்துள்ளன.
இதன்படி, எஸ்பிஐ வங்கியின் வட்டி விகிதம், 8.50%-த்திலிருந்து 8.25%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீடு, வாகனம், தனிநபர் மற்றும் கல்விக் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறையும். அதேபோல், புதிதாக கடன் வாங்குபவர்களுக்கும் வட்டி குறைய வாய்ப்புள்ளது.
மூத்த குடிமக்களுக்கு பாதிப்பு
இதனிடையே, வைப்பு நிதிக்கான வட்டியை எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் குறைத்து வருகின்றன. இந்த வட்டி விகித குறைப்பு, வைப்பு நிதியில் இருந்து வரும் வருமானத்தை குறைக்கும். அதிலும், வைப்பு நிதியின் மூலம் வரும் வருமானத்தை நம்பியிருக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி, குறிப்பிட்ட நிலையான வைப்பு நிதி(FD) கணக்குகளுக்கான வட்டியில் மாற்றங்களை செய்துள்ளது. ஆனால், அனைத்து காலகட்டத்திற்கான வட்டியில் மாற்றங்களை செய்யாமல், 1 முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட எஃப்.டி-க்களுக்கான வட்டி விகிதங்களில் 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
அதன்படி, 1 முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட எஃப்.டி-க்களுக்கான வட்டி விகிதம், 6.8%-த்திலிருந்து 6.7%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்திற்கான மூத்த குடிமக்களின் வட்டி விகிதம், 7.3-லிருந்து 7.2%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதபோல், 2 முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட எஃப்.டி-க்களுக்கான வட்டி விகிதம், பொதுமக்களுக்கு 7%-த்திலிருந்து 6.9%-ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 7.5%-த்திலிருந்து 7.4%-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி விகித மாற்றம், பலருக்கு பலன்களை தந்தாலும், வைப்பு நிதி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு சற்று தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

