ஒவ்வொரு வருடமும் சபரிமலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம் அதில் மண்டல பூஜை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில், இந்த வருடம் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்திற்கான பக்தர்களுக்கான வருகை வெர்ச்சுவல் க்யூ ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு சபரிலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம் என்றும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேசம்போர்டு தெரிவித்துள்ளது. மண்டல பூஜைக்காக நவம்பர் 16 கோயில் நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை மகரஜோதி தரிசனம் ஜன.14ல் பொன்னம்பல மேட்டில் காணலாம் என்றும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சபரிமலை மகரஜோதி, மண்டல பூஜை உள்ளிட்ட விஷேசங்களுக்காக தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களுக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பம்பைக்கு நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கேரளம் பம்பை வழியாக சபரிமலைக்கு செல்கின்றனர். இதனால், போக்குவரத்து துறை தமிழகத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.
அந்த வகையில் சென்னை, அக்டோபர் 28ம் தேதியிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு ஆகிய திருவிழாக்களை முன்னிட்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் ஜனவரி 16 வரை இரு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 16 முதல் 2026 ஜனவரி 16 வரையில் (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சபரிமலை தேவசம் போர்டு அறிவிப்பின்படி டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30 வரை மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. நிகழாண்டு பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி செய்து தரப்படும். 60 நாள்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதளம் மூலமாக
www.tnstc.in மற்றும் TNSTC எனப்படும் செயலி மூலமகாவும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி:9445014452 9445014424, 9445014463 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.