சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு: அதிர்ச்சி கைது! தலைமை அர்ச்சகர் சிக்கினார்! உண்மை என்ன?
சபரிமலை கோயில், தங்கத் திருட்டில் முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்லி தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு என்பவரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கு இப்போது சூடுபிடித்துள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாகப் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே தங்கத் திருட்டில் முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்லி தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு என்பவரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.
கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாகக் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரிக்கும். முறையாக விரதம் இருந்து பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கிடையே சபரிமலை கோயிலில் கடந்த 2019ல் அரங்கேறிய தங்கத் திருட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது அப்போது நடந்த புனரமைப்புப் பணிகளின்போது கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் இருந்த தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டன.
அப்போது தான் தங்கம் திருட்டு போனது. துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம், கருவறை கதவுகளில் இருந்த தங்கம் எனச் சுமார் 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாகக் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இடையில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இப்போது அந்தக் குழுவே விசாரணையைக் கவனித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே இன்றைய தினம் சபரிமலை தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு என்பவர் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் விசாரணைக்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள SID அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். உன்னி கிருஷ்ணன் போற்றி என்பவருடன் ராஜீவரவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், தங்கத் திருட்டு சம்பவத்தில் அவருக்கு முக்கியப் பங்கு இருந்ததாகவும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உன்னி கிருஷ்ணன் போற்றியை சபரிமலைக்கு அழைத்து வந்ததே கண்டரரு ராஜீவரவுதான் என்று கைது செய்யப்பட்ட வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில், SID அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை ராஜீவரவை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்தனர். பிற்பகல் வரை அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னரே, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இதில் மேலும் பலர் சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.





















