சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: அதிர்ச்சி தரும் திருப்பம்! நன்கொடையாளர் தொடர்பு, பெல்லாரி நகைக்கடை ரகசியம்
உன்னிகிருஷ்ணன் போர்த்தி சபரிமலை ஐயப்பன் பெயரைச் சொல்லி வேறு எங்கெல்லாம் நிதி வசூல் செய்தார் ?
கேரள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றக் கோயில். இந்த கோயிலின் ஐயப்பன் சன்னதிக்கு முன்பு துவாரபாலகர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு மேல் சுமார் 42 கிலோ எடை உடைய தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவாரபாலகர் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க தகடுகள் மீது தங்க முலாம் பூசுவதற்காக சபரிமலை நன்கொடையாளராக இருந்த உன்னிகிருஷ்ணன் போர்த்தி என்பவர் மூலம் சென்னையில் உள்ள SMAR CREATION நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது திருவராங்கூர் தேவஸ்தானம். பணிகள் முடிந்து மீண்டும் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டபோது 38 கிலோ தங்கம் குறைந்து துவார பாலகர் சிலை தங்க தகடுகள் 4.52 கிலோ மட்டுமே இருந்துள்ளது.
இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையின் அறிக்கையை 6 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், தங்கம் மாயமானது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, எஸ்ஐடி அதிகாரிகள் உன்னிகிருஷ்ணன் போர்த்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சபரிமலை கருவறையின் இருபுறமும் உள்ள துவாரபாலகன் சிலைகள் தங்க முலாம் பூசப்படவில்லை.
அவை செப்பு தகடுகள். ஆனால்,சபரிமலை கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகன் சிலைகள் பீடங்கள் தங்கமெல்லாம் பூசப்பட்டவை என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தங்க தகடுகள் பதிக்கப்பட்டவை என்பதை உறுதி செய்யும் ஆவணங்களை திருவதாங்கூர் தேவஸ்தம்போடு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உன்னிகிருஷ்ணன், முராரி பாபு, முன்னாள் தேவசம்போர்டு செயலர் ஜெயஸ்ரீ, உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சபரிமலையின் நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போர்த்தி விசாரணை வளையத்திற்குள் அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். உன்னிகிருஷ்ணன் போர்த்தி சபரிமலை ஐயப்பன் பெயரைச் சொல்லி வேறு எங்கெல்லாம் நிதி வசூல் செய்தார் ?அவர் நிதி வசூலை எப்படி , எங்கிருந்து எல்லாம் வாங்கினார்? உண்மையிலேயே சபரிமலைக்கு அசல் நன்கொடையாளர் தானா? இவர் இடைத்தரகராக இருந்து வேறு எந்த நன்கொடையாளர்களிடமிருந்து எல்லாம் பணம் வசூலித்துள்ளாரா? சபரிமலை ஐயப்பன் கோவில் பெயரை சொல்லி நன்கொடை வசூல் செய்த பணம் எவ்வளவு ?
இது போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பிய நிலையில், உன்னிகிருஷ்ணன் பணப்பரிவர்த்தனை மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்புகள் விவரம் உள்ளிட்டவைகளை சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் திருடப்பட்ட தங்கம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள நகை கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 476 கிராம் தங்கம் கோவர்த்தனன் என்பவருக்கு சொந்தமான ரோத்தம் ஜுவல்லரி மூலம் விற்கப்பட்டுள்ளதாகவும் சென்னையை சேர்ந்த நிறுவனம் இந்த பண பரிவர்த்தனைக்கு இடைத்தரகராக செயல்பட்டதாகவும் எஸ்.ஐ.டி விசாரணையில் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணையில் பல திடுக்கிடும் ரகசியங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது . சபரிமலை தங்கம் காணாமல் போன விவகாரம் கேரளா அரசியலில் தொடர்ந்து புயலை திறப்பு வருவது குறிப்பிடத்தக்கது.





















