அறுவை சிகிச்சைக்கு சேமித்த ரூ.2 லட்சத்தை கடித்துக் குதறிய எலி.. கலங்கி நிற்கும் ஏழை விவசாயி!
பையில் இருந்த ரூ.500 தாள்களை எலிகள் கடித்துக் குதறியிருந்தன.

தெலங்கானைவைச் சேர்ந்த ஏழை விவசாயி ரெட்யா நாயக். மஹபூபா மாவட்டத்தில் உள்ள வேமனூர் தான் இவரது சொந்த ஊர். அங்கு அவருக்குச் சொந்தமான சிறு நிலப்பரப்பில் காய்கறிகளை சாகுபடி செய்து வாழ்ந்து வருகிறார்.
அண்மையில் இவருக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் ஓர் அறுவை சிகிச்சைச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். சொந்தபந்தம் சில நல்ல உள்ளம் கொண்டோர் என பலரிடமும் நிதியுதவி பெற்று ரூ.2 லட்சம் சேர்த்துவைத்துள்ளார் ரெட்யா நாயக். அந்தப் பணத்தை அவர் ஒரு துணிப்பையில் வைத்து அலமாரியில் பத்திரப்படுத்தியுள்ளார்.
பணத்தைப் பத்திரப்படுத்திய அவர் எலிகள் பற்றி சிறிதும் யோசிக்காமல் விட்டுவிட்டார். ஒரு நாள் அந்தப் பையை எடுத்தபோது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பையில் இருந்த ரூ.500 தாள்களை எலிகள் கடித்துக் குதறியிருந்தன. அவ்வளவு பெரிய தொகையை எலிகள் குதறியதால் அதிர்ந்து போன விவசாயி அழுது புலம்பினார்.
பின்னர் அக்கம் பக்கத்தார் யோசனை சொல்ல அத்தனையையும் அள்ளிக் கொண்டு வங்கிக்குச் சென்றார். ஆனால், வங்கிகள் அவரின் பணத்தை மாற்றித் தர முன்வரவில்லை. ஒவ்வொரு வங்கியாக ஏறி இறங்கினார்.
மஹபூபாத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்திலும் ஏறி இறங்கிவிட்டார். ஆனால் எந்தப் பயனும் இல்லை. அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் ரூ.4 லட்சம் ஆகும் எனச் சொல்லியிருந்த நிலையில் அவரோ ரூ.2 லட்சம் கடன் வாங்கி, உதவி பெற்று சேமித்து வைத்திருந்தார். இப்போது அதையும் எலி குதறிவிட என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நிற்கிறார்.
ரிசர்வ் வங்கியில் மாற்ற முடியுமா?
கிழிந்த, அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நாயக் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகள் எலியால் குதறப்பட்டவை. அவற்றை மாற்ற ரிசர்வ் வங்கி சட்டத்திட்டங்களில் வழிவகை இல்லை எனக் கூறப்படுகிறது. அதனால், நாயக் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தனக்கான பணத்தை சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
திரும்பவும் அவருக்கு கடனும், பண உதவியும் கிடைக்குமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. தனக்கு மீண்டும் உதவிக்கரங்கள் நீளும் என்றுவிவசாயி எதிர்பார்த்து காத்துள்ளார். இந்த செய்தியும் சமூக வலைதளங்கலில் வேகமாக பரவி வருகிறது. விவசாயி குறித்து பதிவிட்டு வரும் பலர், பணமும், மனமும் படைத்தவர்கள் இந்த விவசாயிக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

