"8 கோடி" மலேசியாவில் இருந்து வந்த பாக்கெட்.. ஏர்போர்ட்டில் மடக்கி பிடித்த அதிகாரிகளுக்கு ஷாக்!
மலேசியாவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த நபரிடம் கோடிக்கணக்கிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பஞ்சாப் விமான நிலையத்திற்கு வந்த நபரிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் இருந்து வந்த அந்த நபரிடம் சோதனை செய்ததில் கோடிக்கணக்கிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாட்டை அதிரவிடும் கஞ்சா கடத்தல்:
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
இந்த நிலையில், மலேசியாவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த நபரிடம் கோடிக்கணக்கிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி, மந்தீப் சிங் என்பவர் மலேசியாவிலிருந்து அமிர்தசரஸ்க்கு விமானத்தில் வந்தடைந்தார்.
அதிகாரிகளுக்கு ஷாக்:
அவரது சாமான்களை சோதனை செய்தபோது, அதிகாரிகள் 8.17 கிலோ எடையுள்ள கஞ்சா போதைப் பொருளைக் கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.8.17 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், "மந்தீப் சிங் மீது போதைப்பொருள் சட்டம் 1985இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மற்றொரு வழக்கில், சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு பயணியிடமிருந்து 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடமிருந்து சுமார் ரூ.35.60 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மற்றும் வளையல் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்தாண்டு, டெல்லியில் 500 கிலோவுக்கும் அதிகமான கோகோயின் கைப்பற்றப்பட்டது. தெற்கு டெல்லியில் நடந்த சோதனைக்குப் பிறகு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் தொடர்பாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச் செல்ல முயன்ற ஜிதேந்திர பால் சிங் என்ற ஜஸ்ஸி என்பவரை சிறப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
டெல்லியில் இந்த சம்பவம் நடந்த ஒரே வாரத்திற்குள் 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 762 கிலோ போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே வாரத்தில் அதிகப்படியான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

