Justice Gavai: ஏற்கனவே குற்றச்சாட்டு இருக்கு.. நீங்க வேற மாட்டி விடுறீங்களா.? நீதிபதி கவாய் கூறியது என்ன.?
மத்திய அரசின் நிர்வாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருவதாக, உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் கூறியுள்ளார். அவர் எதனால் அப்படி கூறினார் தெரியுமா.?

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, நிர்வாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை மசோதாக்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது, குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் காலக்கெடு விதித்தது. அதேபோல், மத்திய அரசு அமல்படுத்திய வக்பு திருத்த சட்டத்தில் சில பிரிவுகளை நிறுத்தி வைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்களும் உச்சநீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தனர்.
மேற்கு வங்கம் விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கு
இந்த நிலையில், வக்பு சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரியும், அமைதியை மீட்டெடுக்க துணை ராணுவப் படைகளை அனுப்பி வைக்கக் கோரியும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விசாரணையின்போது நீதிபதி கேள்வி
இந்த வழக்கின் விசாரணையின்போது, இந்த விவகாரத்தில், குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?, ஏற்கனவே, நிர்வாக அதிகாரத்துக்குள் நாங்கள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம், இப்போது உத்தரவு பிறப்பித்தால், இதுவும் அத்துமீறலாக கருதப்படாதா என்றும் மனுதாரர்களிடம் நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பினார்.
அடுத்த மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் மூத்த நீதிபதியான பி.ஆர். கவாயின் இந்த கருத்து, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

