இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது 8 ஆயிரத்து 630 புகார்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவை கூட்டத்தொடரில் திமுக எம்பி மாதேஸ்வரன் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பதவி வகித்த நீதிபதிகள் மீது எத்தனை புகார் பெறப்பட்டுள்ளது? அந்த புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
நீதிபதிகள் மீதான புகார்கள்:
திமுக எம்பி-யின் கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேவால் பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதில் பொதுமக்களை அதிர்ச்சிக்கு ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஆண்டும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபகள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கிடைக்கப்பெற்ற புகார்களின் எண்ணிக்கையை ஆண்டுவாரியாக கீழே காணலாம்.
10 ஆண்டுகள் புகார் பட்டியல் விவரம்:
2016ம் ஆண்டு - 729
2017ம் ஆண்டு - 682
2018ம் ஆண்டு - 717
2019ம் ஆண்டு - 1037
2020ம் ஆண்டு - 518
2021ம் ஆண்டு - 686
2022ம் ஆண்டு - 1012
2023ம் ஆண்டு - 977
2024ம் ஆண்டு - 1170
2025ம் ஆண்டு - 1102
கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக கடந்த 2024ம் ஆண்டில் 1170 புகார்கள் நீதிபதிகள் மீது எழுந்துள்ளது. மொத்தமாக, கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 630 புகார்கள் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வேதனை:
திமுக எம்பி மாதேஸ்வரன் இந்த எம்பிக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், அவரது அந்த கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேவால் பதிலளிக்கவில்லை.
இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் இடமாக உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் உள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதே ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் புகார்கள் எழுந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதி்ரச்சியை உண்டாக்கியுள்ளது.
பட்டியலில் இருப்பது உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான புகார்கள் மட்டுமே ஆகும். இவர்கள் தவிர மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மீதான புகார்களையும் சேர்த்தால் அது பல மடங்கு அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.
புகார்களுக்கு ஆளாகியுள்ள நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டை முறையாக விசாரித்து சில புகார்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள புகார்கள் மீதும் தக்க விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.























