சென்னை-தூத்துக்குடி வந்தே பாரத் ரயில்: பயணிகளுக்கு குட் நியூஸ்! விரைவில் புதிய சேவை?
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு ஒரு வந்தே பாரத் ரயிலையும் தஞ்சையில் இருந்து மைசூர் வழியாக ஒரு வந்தே பாரத் ரயிலையும் இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதேபோன்று தஞ்சையிலிருந்து ஓசுருக்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்கவும் ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து இருக்கிறது. ஏற்கனவே கடந்த மாதம் சென்னை எக்மோரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிவேகம், சொகுசு உள்ளிட்டவை காரணமாக வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பல வழித்தடங்களில் தொடர்ச்சியாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், சென்னை - எழும்பூர், சென்னை - கோவை, சென்னை - நாகர்கோவில், சென்னை- பெங்களூர் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை தற்போது இருக்கை வசதிகள் கொண்ட ரயிலாக தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் உள்ளது.
அதே போல, சென்னை- மதுரை, நெல்லைக்கு கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில்தான், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு ஒரு வந்தே பாரத் ரயிலையும் தஞ்சையில் இருந்து மைசூர் வழியாக ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்கவும் ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் சென்னை எக்மோரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில்தான் மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து இருக்கிறது. இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை சாதாரண ரயில்களை விட கட்டணம் அதிகம். ஆனாலும் முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், பயோ டாய்லட் வசதி, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தற்போது முத்துநகர் ரயில் மட்டுமே உள்ளது. தொழில் நகரமாகவும் திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளிட்ட ஆன்மிக தலங்கள் நிறைந்த மாவட்டமுமாக இருக்கும் தூத்துக்குடிக்கு சென்னையில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த சூழலில்தான், சென்னை - தூத்துக்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான தீவிர நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 8 முதல் 9 மணி நேரத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.























