மும்பைக்கு வந்த விமானம்.. நடுவானில் எஞ்ஜின் ரிப்பேர்.. மீண்டும் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா
அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் எஞ்ஜின் நடுவானிலே பழுதாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் ஏர் இ்ந்தியாவிற்கு சொந்தமான விமானம் வெடித்துச் சிதறியது ஒட்டுமொத்த நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த சம்பவம் முதல் விமான பயணத்தில் சிறு தொழில்நுட்ப கோளாறு என்றாலும் மக்கள் பீதி அடைகின்றனர்.
மும்பைக்கு பறந்து வந்த விமானம்:
இந்த நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஏர் இந்தியாவிற்கு சொந்தமான ஏஐ180 விமானம் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்து நேற்று திட்டமிட்ட நேரத்தில் புறப்பட்டது.
நடுவானில் பழுதான எஞ்ஜின்:
அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு பறந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதை விமானி கவனித்தபோதுதான் விமானத்தின் இரண்டு எஞ்ஜின்களில் இடது புற எஞ்ஜின் பழுதாகியிருந்தது தெரியவந்தது. இந்த விமானம் சிங்கப்பூரில் இருந்து மும்பை வரும் வழியில் இந்த எஞ்ஜின் பழுதாகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்திய வான்வழி எல்லைக்குள் விமானம் வந்ததால் அருகில் இருந்த விமான நிலையத்தில் விமானத்தை இறக்க விமானி முடிவு செய்தார். இதன்படி, அருகில் இருந்த கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், எஞ்ஜின் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது.
உயிர் தப்பிய பயணிகள்:
மும்பைக்குச் செல்ல வேண்டிய விமானம் திடீரென கொல்கத்தாவில் நேற்று நள்ளிரவு 12.45 மணிக்கு தரையிறங்கியதால் பயணிகள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர். பின்னர், எஞ்ஜின் பழுது பார்க்கும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இன்று காலை 5.20 மணிக்கு விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிக் கொள்ளுமாறு விமானத்தின் கேப்டன் கேட்டுக்கொண்டார்.
பயணிகளின் பாதுகாப்பு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும் விமானி தெரிவித்தார். நடுவானில் எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டாலும் விமானி சாதுர்யமாக விமானத்தை கொல்கத்தாவில் இறக்கியதால் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர்.
மறக்க முடியாத அகமதாபாத் சோகம்:
கடந்த வாரம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் விமானத்தில் இருந்த 241 விமானிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை விமான விபத்திற்கான காரணம் முழுமையாக கண்டறியப்படவில்லை.
இந்தியாவின் முக்கியமான விமான நிறுவனமாக ஏர் இந்தியா உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா விமானத்தை டாடா நிறுவனம் வாங்கியது. டாடா குழுத்தின் பொருட்கள் அனைத்தும் தரமானது என்று பெயர் பெற்ற நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கிய பிறகு இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறில் சிக்குவதும் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.





















