கலப்பட மஞ்சள் கண்டுபிடிப்பது எப்படி...? மக்களே உஷாரோ... உஷாரு!!!
சந்தையில் கலப்பட மஞ்சள் துாள் விற்பனை அதிகரித்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மஞ்சள் துாளை பயன்படுத்துவதற்கு முன், பரிசோதனை செய்து அதன் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்'

தஞ்சாவூர்: சந்தையில் கலப்பட மஞ்சள் அதிகரித்து வருகிறது. எனவே அதை பயன்படுத்தும் முன் பரிசோதித்து கொள்ளுங்கள் என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சந்தையில் கலப்பட மஞ்சள் துாள் விற்பனை அதிகரித்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மஞ்சள் துாளை பயன்படுத்துவதற்கு முன், பரிசோதனை செய்து அதன் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்' என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது. உணவின் சுவை, நிறம் மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக விளங்குவது அனைத்து விதமான சமையலிலும் சேர்க்கப்படும் மஞ்சள் துாள். அதீத மருத்துவக்குணங்கள், நோய் தீர்க்கும் குணங்கள் அடங்கியது.
மஞ்சள், பண்டைய காலங்களிலிருந்தே பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒர் அற்புதமான மூலிகை ஆகும். இதன் மஞ்சள் நிறத்திற்கு காரணமான குர்குமின் என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், மஞ்சளுக்கு பல நோய்களை தடுக்கும் மற்றும் குணப்படுத்தும் திறனை அளிக்கிறது. குர்குமின், வீக்கத்தை ஏற்படுத்தும் சைட்டோகின்களை தடுப்பதன் மூலம் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால், கீல்வாதம், புற்றுநோய், மற்றும் இதய நோய் போன்ற அழற்சியுடன் தொடர்புடைய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
குர்குமின், ஆபத்தான மூலக்கூறுகளால் ஏற்படும் செல் சேதத்தைத் தடுக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இதனால், இளவயதிலேயே வயதான தோற்றம், புற்றுநோய் மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
ல்சீமர் நோய் மற்றும் பிற நரம்பியல் நோய்களுக்கு எதிராக மூளையை பாதுகாக்கவும், மூளையின் அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது. மஞ்சள், செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடவும் உதவுகிறது. மஞ்சள், இயற்கையான வலி நிவாரணியாக செயல்பட்டு, கீல்வாதம் மற்றும் தசை வலி போன்ற வலிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது மஞ்சள் தூள். ஆயுஷ் மருத்துவத்தில் முக்கிய பங்காற்றும் மஞ்சள் துாளில், கலப்படம் செய்து சந்தையில் விற்கப்படுவதாக தொடர்ந்து அரசுக்கு புகார்கள் வந்தபடியே இருந்தது. நிறத்தை மேம்படுத்த, செயற்கை நிறமிகள், தீங்கு விளைவிக்கும் சாயங்கள் போன்ற பொருட்கள் மஞ்சள் தூளில் கலக்கப்படுகின்றன.
குறிப்பாக, மெட்டானில் மஞ்சள், லெட் குரோமேட், சுண்ணாம்பு துாள், காட்டு மஞ்சள் ஆகியவை கலக்கப்படுகின்றன. இவற்றை சாப்பிடுவதால், புற்றுநோய், வயிற்று வலி, குமட்டல், செரிமான கோளாறுகள் என்று, உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் லாப நோக்கத்திற்காக, அதிக அளவில் கலப்பட மஞ்சள் துாள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றை வீட்டிலேயே பரிசோதித்து கண்டறியலாம் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் சற்றே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
சந்தையில் விற்கப்படும் அனைத்துவித மஞ்சள் துாளும் சந்தேகத்திற்கு உட்பட்டவை அல்ல. ஆனால், பிரபல நிறுவனத்தின் பெயரில் கூட, சில நேரங்களில் போலியான லேபிள் ஒட்டப்பட்டு மஞ்சள் துாள் விற்கப்படுகிறது. இதுபோன்ற கலப்பட மஞ்சள் துாளை வாங்கி சாப்பிடுவதால், சிறிது, சிறிதாக உடல்நலம் பாதித்து புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
வீட்டில் பயன்படுத்தப்படும் மஞ்சள் துாள் இயற்கையானதுதானா? அல்லது கலப்படமா என்று தரத்தை உறுதி செய்து கொள்வது முக்கியம். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் துாள் சேர்க்கவும். சிறிது நேரத்தில், மஞ்சள் துாள் அனைத்தும் டம்ளரின் கீழே தங்கிவிட்டால் அது கலப்பிடமில்லாத மஞ்சள் துாள். கீழே படியாமல், அதன் துகள் மேலே மிதந்தாலோ, தண்ணீர் அடர்த்தியான கரும் மஞ்சள் நிறமாக மாறினாலோ, அது கலப்பட மஞ்சள் துாள். மஞ்சள் துாளில் சந்தேகம் எழுந்தால், அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, உணவு பாதுகாப்பு துறையின், 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும், உணவு பாதுகாப்பு துறையின் செயலி மற்றும் சமூக வலைதளங்களிலும் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட கடையிலோ, நிறுவனத்திலோ ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எனவே மக்கள் அச்சப்படாமல் தாங்கள் வாங்கும் மஞ்சள் தூள் தரத்தை மிகவும் எளிமையாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.























