சிறுமிகளை விபச்சாரத்திற்கு தள்ளிய கும்பல் !! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
விபச்சாரத்திற்கு சிறுமிகளை பயன்படுத்திய கும்பல்களுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமிகளை விபச்சாரத்திற்கு தள்ளிய கும்பல்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கடந்த 2014 ஆம் ஆண்டு 7ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும் , 8 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியும் தோழிகளாக இருந்தனர். இந்த மாணவிகளை இட்லி கடை நடத்தி வந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி தனலட்சுமி (வயது 32) தனது கள்ளக் காதலனான ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையாக்கினார். தொடர்ந்து மாணவிகள் இருவரையும் அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். பின்னர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த விபச்சார புரோக்கரான கலாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று செல்வராஜ் (வயது 58) என்பவர் மூலம் கட்டாயப்படுத்தி தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
மாணவிகள் விற்பனை
தனலட்சுமி திட்டக்குடியைச் சேர்ந்த மத போதகரான அருள்தாஸ் என்பவரின் வீட்டிற்கு மாணவிகள் இருவரையும் 2 நாட்கள் அனுப்பி வைத்தார். அங்கு மாணவிகளுடன் மதபோதகர் அருள்தாஸ் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். தனலட்சுமியும், கலாவும் புரோக்கர்களுடன் சேர்ந்து 2 மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், வடலூர், நெய்வேலி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.
பின்னர் அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 39) அவரது மனைவி தமிழரசி (வயது 39) ஆகியோருக்கு மாணவிகளை விற்பனை செய்தனர். அவர்கள் மாணவிகள் இருவரையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்க வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.
தப்பி சென்று மாணவிகள் புகார்
சதீஷ்குமாரின் வாடகை வீட்டில் இருந்து மாணவிகள் இருவரும் திட்டக் குடிக்கு தப்பிச் சென்று போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் சதீஷ்குமார், தமிழரசி, மதபோதகர் அருள்தாஸ், கபிலன் உட்பட 23 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி உட்பட 4 பேர் தலைமறைவாகினர்.
எஞ்சிய 19 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு 2016 ஆம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தலைமறைவான 4 பேர் தவிர்த்து 19 பேர் மீது கடலூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணையின் போதே இருவர் மரணம் அடைந்தனர்.
10 ஆண்டு சிறை தண்டனை
இந்த வழக்கில் 16 பேர் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டு மத போதகர் அருள் தாசுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றவர்களுக்கு தனித் தனியாக சிறை தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தமிழரசி, கபிலன், ஜெபினா (வயது 39) ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி போலீசார் தேடிவந்தனர். இவர்களில் ஜெபினா போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜெபினாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கில் எஞ்சிய 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார். 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்





















