சந்தேகத்தால் சிதையும் உறவுகள்; பொசசிவ்னஸ்க்கு என்ன காரணம்? சரிசெய்வது எப்படி?
உறவு விரிசல்களுக்குக்கு காரணமாகும் சந்தேகம்; பொசசிவ்னஸ்- எதனால் ஏற்படுகிறது? சரிசெய்வது எப்படி?

சந்தேக குணத்தைக் தூண்டும் இணையரின் செயல்கள், மூன்றாம் நபரால் உண்டாகும் உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றை சரிசெய்வது எப்படி என்று பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
தற்கால உறவு விரிசல்களுக்கும் மண முறிவுகளுக்கும் முக்கிய காரணமாக இருக்கும் விசயம் இணையருள் ஒருவருக்கு சந்தேக குணம் ஏற்படுவதால் நேர்கிறது.
Suspicion of Infedility
தனது இணையர் மற்றொருவருடன் உடல் மற்றும் மன ரீதியான உறவில் இருக்கிறாரோ என்ற சந்தேகமே இல்லற வாழ்வின் இன்பத்தை இல்லாமல் செய்து விடுகிறது. இந்த சந்தேக குணத்திற்கு முலாம் பூசப்பட்ட வடிவமாக வெளியே கூறும் குணமாக POSSESSIVENESS என்று அழகியலுடன் கூறப்படுகிறது.
POSSESSIVENESS அடிக்கடி கேள்விபட்டிருப்பீர்கள். என் ஆளு என் மேல ரொம்ப பொசசிவ்ங்க..
என் ஹப்பி ரொம்ப பொசசிவா இருப்பாரு என்று பெருமையுடன் கூறுவோம் .
என்னிடம் இப்போது எது இருக்கிறதோ அதை எனது சொத்து அல்லது POSSESSION என்று அழைக்கிறோம். எனக்கு ஒரு கார் இருந்தால், அது எனது சொத்து என்கிறோம். ஆனால் அந்த காரை நான் இன்னொருவருக்கு விற்று விட்டேன் என்றால் அது அவரின் சொத்து. அதே போல்தான் அனைத்து அசையும் அசையா சொத்துகளும்.
இருவர் கதையும் முடியும்
ஆனால் நம் இணையர் என்பது சொத்து அல்ல. நாம் அவருடனும் அவர் நம்முடனும் அன்பால் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தினால் இணைந்து இருக்கிறோம். நிலவும் பூமியும் கூட ஒப்பந்தத்தில் மட்டுமே இணைந்திருக்கின்றன. இருவரில் ஒருவர் ஒப்பந்தத்தை மீறினால் இருவரும் கதையும் முடிந்தது. இப்படி இருக்கையில் எனது உடைமை நீ, எனது சொத்து நீ என்ற ரீதியில் உறவுகளை அணுகுவது நல்ல போக்கு அன்று.
இங்கு பிறக்கும் ஒவ்வொருவருக்கும் சுயமாக சிந்திக்கும், சுயமாக செயல்படும் பல்வேறு பட்ட உறவுகளை வளர்த்துக் கொள்ளும் உரிமை சுதந்திரம் உண்டு. திருமண பந்தத்தில் இணைந்தவர்களுக்குத் தெரியும், அத்தகையோர் எதிர்பாலினத்திடம் எப்போதும் ஒரு பாதுகாப்பான எல்லையை வகுத்துக் கொண்டே பரஸ்பரம் ஆரோக்கியமான உறவுமுறையை வளர்ப்பர்.
இணையரிடம் பகிரத்தக்க, இணையரிடம் மட்டுமே பேசத்தக்க விஷயங்களைப் பிறரிடம் நட்பு என்ற எல்லைக்கு மீறி பேசுவதும் பழகுவதும் தவறு. ஆபத்து.
இணையரிடம் தான் அப்டேட் செய்ய வேண்டும்
எப்போதும் நமது அன்றாட நிகழ்வுகளை நமது நட்புகளை, புதிதாகத் தோன்றிய நட்பு என நமது இணையரிடம்தான் முதலில் அப்டேட் செய்ய வேண்டும். இணையருக்குத் தெரியாமல் மறைத்தோ பதுக்கியோ ஒரு நட்பைத் தொடர்வது சரியானதன்று. நல்லதன்று.
அது இணையருக்குத் தெரியவரும் போது அமைதியான குளத்தில் கல்லை எரிந்தது போல குழப்பத்தை ஏற்படுத்தும். பூகம்பங்களைத் தோற்றுவித்து உறவின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்க்கலாம். அவ்வாறு இணையரிடம் பகிர இயலாத நட்புகளை சுயமாக துண்டித்துக் கொள்வது நல்லது. அல்லது இணையருடன் பேசி அவரது அனுமதியுடன்நட்பை அதன் அளவுகோலில் தொடரலாம்.
ஃப்ளிர்டிங், செல்லம் கொஞ்சுதல், அத்தியாவசியமின்றி இரவு நேரங்களில் உரையாடல் ஆகியன ஆபத்தான போக்குகள். உடனே நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
விடலைப் பருவ காதல்
நம் இணையர் நம்மைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பதும் எப்போதும் நம்மிடம் மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பதும் வேறு யாருடனும் பேசக்கூடாது, குறிப்பாக எதிர்பாலினத்துடன் பேசுவதே குற்றம் என்று நினைப்பதும் விடலைப் பருவ காதலில் இருக்கும் விசயங்கள். காரணம் விடலைப் பருவத்தில் மூளை மற்றும் சிந்தனை வளர்ச்சி அவ்வளவுதான் இருக்கும். அப்போது முதிர்ச்சி இருக்காது. மேலும் வேறு வேலையும் இருக்காது. எனவே எப்போதும் காதலர் நினைவில் சுற்றுவது என்று ஓடும்.
ஆனால் திருமணத்திற்கு பின்பான வாழ்க்கை அப்படி இல்லை, புவாவுக்கு காசு வேணும், துணிமணிக்கு துட்டு வேணும், குழந்தை பிறக்கும். குழந்தையை நன்றாக வளர்க்க உழைக்க வேண்டும். இப்படியாக காலம் ஓடிக்கொண்டிருக்கும்
இதில் காதல் செய்த காலம் போல எப்படி தொடர்ந்து பேசிக் கொண்டே அவர் நினைப்புடன் இருப்பது? இதைப் புரிந்து கொள்ள சிந்தனையில் முதிர்ச்சி இருந்தால் போதும். இங்கு காதல் ஜோடிகள் மணமுறிவுக்கு வருவது திருமணத்திற்கு பின்பான இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாததால் இருக்கலாம்.
நம் காதலியோ காதலனோ, மனைவியோ கணவனோ நமது சொத்து (POSSESSION) கிடையாது. முதலில் நாம் அந்த சிந்தனைப்போக்கில் இருந்து வெளியே வந்தால் தனக்கே தனக்கு என்ற குணத்தில் இருந்து வெளியே வரலாம்.
நாம் நம் உறவைப் பேணுவதில் நாட்டத்துடனும் இணையருடன் பழகுவதிலும் அன்பு செய்வதிலும் நேரத்தை செலவு செய்து அவருக்குரிய வெளியையும் சுதந்திரத்தையும் வழங்கி சகிப்புத்தன்மையுடன் நடப்போமானால் பூமியும் சந்திரனும் போல எப்போதும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் அன்பு செய்து பெருவாழ்வு வாழ இயலும்.
சந்தேகம் தோன்றினால் அது நல்ல குணம் இல்லை என்பதை அறிந்து இணையருடன் அமைதியாக அன்பாகப் பேசி இருவரும் சேர்ந்து குடும்ப நல ஆலோசனை பெற வேண்டும். மனநல ஆற்றுதல் சிகிச்சை பெற்று சந்தேக குணத்தில் இருந்தும் தனக்கே தனக்கு என்ற குணத்தில் இருந்தும் வெளியேறி இல்லற பந்தத்தின் இனிமையை அனுபவிப்பது சிறப்பு .
சந்தேக குணத்திற்கு சிகிச்சை
- பரஸ்பரம் இருவரிடையே பிணைப்பு / அன்பு செய்தல் / சகிப்புத்தன்மை / வெளிப்படைத்தன்மை ஆகியவை சந்தேக நோய்க்கு சிகிச்சை
- முறையான மன நல மருத்துவ ஆலோசனை
- குடும்ப நல ஆற்றுதல் சிகிச்சை.
உறவில் ஏற்படும் விரிசல்களை அன்பெனும் கோந்தால் ஒட்டிவிடுவோம் என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
























