வீட்டில் உள்ள பெண்களுக்கு செம குட் நியூஸ்..அழகுகலை இலவச பயிற்சி: எங்கு தெரியுங்களா?
கட்டணமில்லாமல் திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது. பொறியியல், தொழிற்பிரிவு, நவீன தொழில்நுட்பம் என பல துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

வீட்டில் உள்ள பெண்களுக்கு செம குட் நியூஸ் இருக்கு. ஆமாங்க அழகுகலை பயிற்சியை இலவசமாக தமிழக அரசு வழங்குகிறது- அப்புறம் என்ன உடனே உங்க விண்ணப்பித்தை அனுப்பிடுங்க.
10, 12-ம் வகுப்பு வரையே படித்துள்ளீர்களா? சுயமாக தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு சரியான தருணம் இதுதான். தாட்கோ மூலம் சென்னையில் இலவசமாக அழகுகலை மற்றும் பெண்களுக்கான வெல்னஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பேஷியல், முடி அலங்கரிப்பு, வேக்ஸிங் உள்ளிட்ட பல அழகுகலைக்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாடு கார்ப்ரேஷன் (தாட்கோ) செயல்படுகிறது. இதன் மூலம் இவ்வகுப்பு கட்டணமில்லாமல் திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது. பொறியியல், தொழிற்பிரிவு, நவீன தொழில்நுட்பம் என்று மட்டுமின்றி பல்துறைகளில் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள்/ அமைப்புகள் மூலம் இப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு திறனுக்கு தகுந்த வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் ஏற்படுத்தி தரப்படுகிறது. சுயதொழிலுக்கான அரசின் கடனுதவி திட்டங்களும் செயல்படுத்தபடுகிறது. அந்த வகையில், தாட்கோ மூலம் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.
தற்போது தாட்கோ மூலம் பெண்களுக்கான அழகுகலை பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் பல்வேறு விதமான அழகுகலைகள் கற்பிக்கப்படும்.
கற்பிக்கப்படும் பயிற்சிகள்
முடி அலங்காரம்
புருவம் திருத்தம்
வேக்ஸிங்
பேஷியல்
கை மற்றும் கால் சுத்தம்
அழகுபடுத்துதல்
அழகுகலைக்கான தொழில் சந்தை என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது. பெண்களுக்கான வெல்னஸ் கேர் என்பது நல்ல லாபம் தரும் கலை தொழிலாகும். வீட்டில் உள்ள பெண்கள் முதல் பணிக்கு செல்லும் பெண்கள் வரை பார்லரின் சேவைகள் தேவை அதிகம் உள்ளது. அந்த வகையில், சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு சரியான வாய்ப்பாக அமைகிறது. இதனை முறையாக கற்கொள்ள ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிற்சி வேண்டிய தேவை உள்ளது. ஆனால், தாட்கோ மூலம் இலவசமாகவே கற்கொள்ளலாம்.
தாட்கோ மூலம் வழங்கப்படும் அழகுகலை பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். விண்ணப்பதார்கள் 18 வயது முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதார்களின் குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
அழகுகலை பயிற்சி தற்போதைக்கு சென்னையில் மட்டுமே நேரடி வகுப்புகளாக நடத்தப்படும். இது குறுகிய காலப் பயிற்சி ஆகும். இப்பயிற்சிக்கு தங்கும் வசதி கிடையாது. அதனால், சென்னையில் உள்ளவர்கள் மட்டும் எளிமையாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் https://tahdco.com/ என்ற தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ஆன்லைன் படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் வகுப்புப் பிரிவு, கல்வித்தகுதி, தேர்ச்சி பெற்ற வருடம், படித்த பள்ளி, விண்ணப்பதாரின் பெயர், தந்தை பெயர், தொழில், தாயின் பெயர் மற்றும் தொழில், குடும்ப வருமானம், பிறந்த தேதி, பாலினம், வீட்டு முகவரி, மொபைல் எண், இமெயில் முகவரி உள்ளிட்டவை கொண்டு நிரப்ப வேண்டும்.
மேலும், ஆதார் எண், வகுப்பு பிரிவு சான்றிதழ் எண், வகுப்பு பிரிவு சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவை தேவை. கூடுதலாக விண்ணப்பதார்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்து பதிவு செய்ய வேண்டும். புகைப்படம் மற்றும் சான்றிதழ்கள் ஒரு எம்பி-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
மேலும் தாட்கோ மூலம் ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை, எம்பெடெட் சென்சார் சோதனை, பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகள் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. அதற்கு தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ளலாம்.





















