8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
மயிலாடுதுறை வில்லியநல்லூரில் ஜூலை 10-ல் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் பங்கேற்றுப் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தரும் நோக்கில், ஒரு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் 'சுஜா சோயி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தும் இந்தத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ளது. இம்முகாம் குறித்த விரிவான விவரங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம்
வருகிற 10.07.2026 வெள்ளிக்கிழமை அன்று இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், 5.வில்லியநல்லூர் பகுதியில் அமைந்துள்ள 'சுஜா சோயி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவன வளாகத்தில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது.
நேரம்: 10.07.2026 அன்று காலை 10:00 மணிக்குத் தொடங்கும் இந்த முகாம், பிற்பகல் 03:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
300+ காலிப்பணியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி
'சுஜா சோயி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 300-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு இந்த முகாம் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் பங்கேற்கத் தேவையான தகுதிகள் பின்வருமாறு.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்த, 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் (ஆண்/பெண் இருபாலரும்) இதில் பங்கேற்கலாம்.
கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ (Diploma), டாலி (Tally) படித்தவர்கள், பி.இ (B.E) பட்டதாரிகள் மற்றும் இதர இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு முடித்த வேலைநாடுநர்கள் அனைவரும் தங்களது கல்வித் தகுதிக்கேற்ப விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
கூடுதல் சிறப்பம்சங்கள்: இலவச வழிகாட்டுதல்கள்
இந்த முகாமில் தனியார் துறை வேலைவாய்ப்பு மட்டுமன்றி, இளைஞர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு கூடுதல் சேவைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
1. திறன் பயிற்சி (Skill Training): இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான இலவசப் பயிற்சி ஆலோசனைகள்.
2. சுயதொழில் வழிகாட்டுதல்: சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்குத் தேவையான வங்கிக் கடன் வசதிகள் மற்றும் அரசு மானியங்கள் குறித்த விரிவான ஆலோசனைகள்.
3.அயல்நாட்டு வேலைவாய்ப்பு: வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய தகவல்கள்.
4. அரசு போட்டித்தேர்வு வழிகாட்டுதல்: டி.என்.பி.எஸ்.சி (TNPSC), வங்கித் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகத் தயாராவது குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்.
கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்;
இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தகுதியான வேலைநாடுநர்கள் தங்களது
* சுயவிவரக் குறிப்பு (Resume/Biodata)
* கல்விச் சான்றிதழ்களின் நகல்கள்
* அடையாள அட்டை (ஆதார் அட்டை போன்ற அரசு அடையாளச் சான்றுகள்
* பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முன் அனுபவம் ஏதேனும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் நேரில் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆன்லைன் பதிவு மற்றும் தொடர்பு எண்
இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் (Employers) மற்றும் வேலைநாடுநர்கள் (Job Seekers) தங்களது விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரியில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் விபரங்களைப் பெற விரும்புவோர் மற்றும் சந்தேகங்கள் உள்ளவர்கள் 04364-299790 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடலாம்.
மாவட்ட ஆட்சியர் அழைப்பு
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார்துறை நிறுவனங்களில் வேலை தேடும் வேலைவாய்ப்பற்ற தகுதியான இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, முகாமில் நேரில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























