Pa Ranjith: ஆளும் அரசுக்கு எதிராக நாம் பேச முடியாது.. இயக்குநர் பா.ரஞ்சித் ஆதங்கம்!
ஜனநாயகன் பட விவகாரத்தில் தணிக்கை வாரியத்தின் செயல்பாடு சர்ச்சைகளை கிளப்பியிருந்தது. அதேசமயம் சமூக நல்லிணத்தை சீர்குலைப்பதாக கருதப்படும் தி கேரளா ஸ்டோரி போன்ற படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சினிமா தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே திரைப்படங்களுக்கு தணிக்கைத்துறையின் தரப்பிலான பிரச்னை இருந்து வருகிறது என பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சென்சாரில் சிக்கிய ஜனநாயகன்
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தராமல் தணிக்கை வாரியம் இழுத்தடித்தால் இதுவரை படம் வெளியாகவில்லை. பொதுவாக ஒரு படம் தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்டால் அதனைப் பார்க்கும் அதிகாரிகள் மாற்றங்கள் சொல்லி அதற்கேற்ப சான்றிதழ் வழங்குவார்கள். அதில் படக்குழுவுக்கு உடன்பாடில்லை என்றால் மறு தணிக்கைக்கு அனுப்பலாம். இப்படியான நிலையில் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தணிக்கை வாரியத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றது.
இந்த வழக்கில் ஜனநாயகன் குழுவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தணிக்கை வாரியம் உடனடி மேல்முறையீடு தொடங்கி பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. அதேசமயம் தணிக்கை வாரியம் செயல்பாடு பெரும் சந்தேகங்களை கிளப்பியது. பல திரைப்பட பிரபலங்கள் வெளிப்படையாகவே தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்தனர். மேலும் சமூக நல்லிணத்தை சீர்குலைப்பதாக கருதப்படும் தி கேரளா ஸ்டோரி போன்ற படங்களுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சென்சார் சர்டிபிகேட் வழங்கப்படுவதும் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
பா.ரஞ்சித் ஆதங்கம்
இந்த நிலையில் கேரளாவில் நடந்த இலக்கிய திருவிழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சித் தணிக்கைத்துறையை கடுமையாக சாடியுள்ளார். அதாவது, ‘நான் என்னுடைய முதல் படத்திலிருந்து சென்சார் தொடர்பாக பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறேன். குறிப்பாக என்னுடைய மெட்ராஸ் படத்தை கடுமையாக தணிக்கைத்துறை அதிகாரிகள் விமர்சித்தனர். நான் ரவுடிகள், ரவுடியிசம் பற்றி படம் எடுப்பதாகவும், இதை அவர்களுக்கு மட்டும் காட்டுங்கள், பொதுமக்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள். அதனால் நாங்கள் ஏ+ சான்றிதழ் தருகிறோம் என கூறினார்கள்.
நான் இந்த பிரச்னைக்கு தீர்வாக, சென்சாரில் உள்ள ஐந்து பேரில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என கூறினேன். காரணம் நான் சென்றாலே அவர்கள் எரிச்சலாக பார்க்கிறார்க. எங்கள் கலாச்சாரம் அவர்களுக்கு புரிவதில்லை. அதுதான் இங்கு பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இப்போது தான் பிரச்சார படங்கள், அதற்கு எதிரான படங்கள் வெளியாகிறது. இதற்கு நாம் ஒன்றாக இணைந்து போராட வர வேண்டும். சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த பிரச்னை இருந்துள்ளது.
ஆனால் இப்போது தான் தீவிரத்தை அனைவரும் உணர தொடங்கியுள்ளனர். அதனால் அப்பிரச்னை பொதுவாக மாறியுள்ளது. ஆளும் அரசுக்கு எதிராக நாம் எதுவும் பேச முடியாது என்ற சூழல் வரும்போது தான் அதன் தீவிரம் புரிகிறது” என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.























