DMK: கடந்த 5 ஆண்டுகள் திமுக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் என்னலாம் நடந்திருக்கும்? வைரல் பதிவு!
போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் துப்பில்லாத காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதல்வரின் கையாலாகாத்தனம் தொடர்ந்து கிழித்து தோரணம் கட்டப்பட்டிருக்கும்.

தமிழக வரலாற்றில் மிகச் சிறப்பான எதிர்க்கட்சி என்றால் அது திமுக மட்டும்தான் என்று நெட்டிசன் ஒருவர் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''கடந்த ஐந்தாண்டுகளாக திமுக மட்டும் எதிர்க் கட்சியாக இருந்திருந்தால்…
- துப்புரவுத் தொழிலாளிகள் போராட்டம் பூதாகரமாக வெடித்திருக்கும். ஸ்டாலின் துப்புரவுத் தொழிலாளியின் யூனிபார்ம் அணிந்து போராட்டத்துக்கு நேரில் வந்திருப்பார்.
- காவல்துறை சாவுகள் குறித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நிகழ்ந்திருக்கும்.
- அரசு மீது விமர்சனம் வைத்தால் கைது செய்ய முகாந்திரம் இல்லாவிட்டாலும் வெள்ளி மாலை கைது செய்து திங்கள் கோர்ட் திறக்கும் வரை ஜெயிலில் அடைத்து பழி வாங்கும் பாசிச மனித விரோத போக்கை கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டம் நடந்திருக்கும்.
- தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் முதல்வர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் வரை நெருக்கடி கொடுக்கப் பட்டிருக்கும்.
- போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் துப்பில்லாத காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதல்வரின் கையாலாகாத்தனம் தொடர்ந்து கிழித்து தோரணம் கட்டப்பட்டிருக்கும்.
- ’’யார் அந்த சார்?’’ என்ற கேள்வி வருடக்கணக்கில் தலைப்புச் செய்தியாக்கப் பட்டிருக்கும்.
இது சும்மா சாம்பிள்தான். எழுத ஆரம்பித்தால் நாவலே எழுதலாம். சுருக்கமாக சொன்னால் உலகில் உள்ள எல்லா விஷயத்திலும் ஆளும் அராஜக ஆட்சியின் அவலத்தை தோலுரித்து கோவன் முதல் கோவணம் கட்டாதவன் வரை, மீசை கோவாலு முதல் பியூஸ் போன மனுஷ் வரை தினம் தினம் உரத்த குரலில் உயிரை விட்டிருப்பார்கள்.
ஆண்டு முழுவதும் கொந்தளிப்பான மனநிலை
திமுக ஐடி விங்கும் அதன் கிளை அமைப்புகளும் அல்லும் பகலும் அயராது ஓவர்டைம் பார்த்து இந்த ஆட்சி மட்டும் தொடர்ந்தால் இன்னும் கொஞ்ச நேரத்தில் உலகமே அழியப் போகிறது என்பது மாதிரியான ஒரு கொந்தளிப்பான மனநிலையிலேயே தமிழகத்தை வருடம் முழுவதும் வைத்திருந்திருப்பார்கள்.
ஆனால் அதுவே ஆள்வது திமுக என்பதால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. முதல்வர் விதவித கெட்டப்களில் மாதம் மும்மாரி பொழிந்ததா அமைச்சரே என்று கேட்டுக் கொண்டு செட்டப் போட்டோ ஷூட்டில் இருந்தார்.
மாயக் குமிழுக்குள் போய் அடைந்து கொள்வார்கள்
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நிகழ்வதுதான்... ஆட்சிக்கு வந்ததும் முதல்வரும், அடிப்பொடிகளும் தாங்களே உருவாக்கிக் கொண்ட மாயக் குமிழுக்குள் போய் அடைந்து கொள்வார்கள். பறக்காவெட்டி போல ஊரை அடித்து உலையில் போடுவார்கள்.
ஆனால் மக்களுக்கான சிறப்பான ஆளுங்கட்சி என்று நமக்கு நாமே திட்டத்தில் நம்பிக் கொள்வார்கள். தேர்தல் வரும். குமிழ் உடைந்து கூப்புக்கு போனதும் நிஜமான உலகம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும். சிறப்பான எதிர்க் கட்சியாக செயல் பட ஆரம்பிப்பார்கள்''.
இவ்வாறு எழுதப்பட்ட பதிவு ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















