Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Udhayanidhi Stalin Election Campaign: வெட்டு ஒன்று, துண்டு ஒன்று என்று மனசில் பட்டதை யாராக இருந்தாலும் சொல்லக் கூடிய சுய மரியாதைக்காரர் செந்தில் குமார்- உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று (மார்ச் 31) தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்காக வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:
''தலைவர் வெற்றி வேட்பாளர் செந்தில்குமாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று வாக்கு செலுத்த வேண்டும். நிச்சயமாக ஓட்டு போடுவீர்களா?
மனசில் பட்டதை சொல்லக் கூடிய சுய மரியாதைக்காரர்
வெட்டு ஒன்று, துண்டு ஒன்று என்று மனசில் பட்டதை யாராக இருந்தாலும் சொல்லக் கூடிய சுய மரியாதைக்காரர் செந்தில் குமார். மக்களுக்கு எது சரியோ, அதைக் கடைசி வரை நின்று போராடி பெற்றுத் தருபவர். ஏற்கெனவே சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர் செந்தில் குமார். அவர் சட்டமன்ற உறுப்பினராக உங்களைத் தேடி வந்திருக்கிறார்.
திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு
திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். செய்வீர்களா? நிச்சயம் செய்வீர்களா?'' என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து பாலக்கோடு தொகுதிக்கு என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன என்பதைப் பட்டியலிட்ட உதயநிதி ஸ்டாலின், செந்தில் குமாரைத் தேர்வு செய்து மக்கள் சட்டமன்றம் அனுப்பினால் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவார் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து திமுக அரசு செய்த சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் உதயநிதி பேசினார்.
சிறைக்கே செல்வார் கே.பி.அன்பழகன்
மேலும் பேசிய உதயநிதி, கிட்டத்தட்ட பாலக்கோடு தொகுதியில் 25 ஆண்டுகளாக அதிமுக நபர் (கே.பி.அன்பழகன்) சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் தொகுதிக்கு எதாவது செய்திருக்கிறாரா?
45 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கில், 10 ஆயிரம் பக்க அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தர்மபுரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதில் அவர் விரைவில் சிறைக்கே செல்வார்’’ என்றும் உதயநிதி தெரிவித்தார்.





















