யார் வசம் விழுப்புரம்? - நம்பிக்கையுடன் பொன்முடி; எழுச்சியுடன் அர்ஜுனன்!
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளான திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் வேட்பாளர்களும், அரசியல் தலைவர்களும் அதிகாலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
விழுப்புரத்தில் குடும்பத்துடன் வாக்களித்தார் பொன்முடி
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள எம்.ஆர்.ஐ.சி (MRIC) உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான க. பொன்முடி தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி விசாலாட்சி, திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி மற்றும் அசோக் சிகாமணி ஆகியோர் குடும்பத்துடன் வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, "தமிழகத்தில் கடந்த ஐந்து கால முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியை மக்கள் அங்கீகரிப்பார்கள். அந்த நல்லாட்சி மீண்டும் தொடரும்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்: கௌதம சிகாமணி
திருக்கோவிலூர் வேட்பாளர் கௌதம சிகாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த முறை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அரசின் நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த முறை அதைவிடக் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் எங்களுக்கு ஒரு சாதாரணப் பிரிவுதான்" என்றார்.
திண்டிவனத்தில் வரிசையில் நின்று வாக்களித்த அதிமுக வேட்பாளர்
திண்டிவனம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் அர்ஜுனன், இன்று காலை தனது சொந்த ஊரான வடகோட்டிபாக்கம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார். அவர் தனது குடும்பத்தினருடன் பொதுமக்களைப் போலவே வரிசையில் நின்று வாக்களித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வாக்குப்பதிவுக்குப் பின் அர்ஜுனன் பேட்டி:
"தமிழகம் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற வேண்டும். பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் விவசாயிகள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களது இலக்கு. இந்த உன்னத நோக்கங்கள் நிறைவேற மக்கள் அனைவரும் 'இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவு தர வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வரும் நிலையில், முக்கியப் புள்ளிகளின் இந்த வாக்குப்பதிவு அரசியல் களத்தில் அனலை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















