தேர்தல் கருத்து கணிப்பு எப்போது வெளியிடலாம்.? புதிய நடைமுறையை வெளியீடு- மீறினால் 2 ஆண்டு சிறை
5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கருத்து கணிப்புகளை தேர்தல் நேரத்தில் வெளியிட தடை விதித்த தேர்தல் ஆணையம், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

நெருங்கும் தேர்தல்- கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தேர்தல் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் கருத்துகணிப்புகளை பல்வேறு அமைப்புகள் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் எப்போது கருத்து கணிப்புகளை வெளியிடலாம்.? மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். மேற்காணும் பொதுத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுதல் தொடர்பாக வரையறைகள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பு எப்போது வெளியிடலாம்.?
(1) யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இது சம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.
தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும், அதாவது:-
(a) ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.
(b) ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.
பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம்.
இரண்டு ஆண்டு சிறை
இப்பிரிவின் விதிமுறைகளை மீறும், யாதொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.
இந்திய தேர்தல் ஆணையம், 09.04.2026 (வியாழக்கிழமை) காலை 7.00 மணியிலிருந்து 29.04.2026 (புதன்கிழமை) மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.




















