மயிலாடுதுறை மாவட்ட வாக்காளர்களுக்கு குட் நியூஸ்: என்ன தெரியுமா..?
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் அட்டவணை மற்றும் சட்ட விதிமுறைகள்
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடத்துவதாக அறிவித்துள்ளது. ஜனநாயகக் கடமையான வாக்களித்தலை அனைவரும் தடையின்றி மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசின் தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோரிடமிருந்து விரிவான அறிவுறுத்தல்கள் வரப்பெற்றுள்ளன.
இதன்படி, 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 135B (Section 135B of the Representation of the People Act, 1951)-ன் கீழ், தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத் தொகுதிகள்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழ்க்கண்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
1. 160. சீர்காழி (தனி)
2. 161. மயிலாடுதுறை
3. 162. பூம்புகார்
இந்தத் தொகுதிகளில் வசிக்கும் அல்லது வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள், மாவட்டம் மற்றும் மாநிலத்தின் எந்தப் பகுதியில் பணிபுரிந்தாலும், அவர்கள் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
விடுமுறை யாருக்கெல்லாம் பொருந்தும்?
வாக்களிக்கும் உரிமை உள்ள ஒவ்வொரு நபரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்.
அனைத்து நிறுவனங்கள்: எந்தவொரு வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனம், தொழிற்சாலைகள் அல்லது வேறு ஏதேனும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இது பொருந்தும்.
சுழற்சி முறை பணியாளர்கள்: சுழற்சி முறையில் (Shift Basis) பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டாயம் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
தற்காலிக மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள்: நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமின்றி, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களுக்கும் (Daily wages and Casual workers) இந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறை மற்றும் அன்றைய தினத்திற்கான ஊதியத்தைப் பெற முழு உரிமை உண்டு.
வெளிமாவட்டப் பணியாளர்கள்: ஒரு நபர் மயிலாடுதுறை மாவட்டத் தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்திருந்து, பணி நிமித்தமாகத் தொகுதிக்கு வெளியே உள்ள நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவருக்கும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
மீறினால் கடும் நடவடிக்கை: அபராத எச்சரிக்கை
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை மதிக்காமல் செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
"மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 135B, துணைப் பிரிவு (1) அல்லது (2)-ன் விதிகளை மீறி, ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காமல் இருப்பது, அவர்களை வேலை செய்யக் கட்டாயப்படுத்துவது அல்லது விடுமுறைக்காக ஊதியத்தைக் குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்டப்பூர்வமான தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவார்கள்."
குறிப்பாக, இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், ஊழியர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது ஜனநாயக விரோதச் செயல் என்பதால் இதில் சமரசம் கிடையாது என்றும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கான வேண்டுகோள்
ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும், பணியாளர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்களது வாக்குகளைத் தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதை உறுதி செய்யத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை அளிக்க மறுக்கும் நிறுவனங்கள் குறித்துத் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்குத்தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்



















