Edappadi Palanisamy: தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள், பிரச்சாரம்; எல்லாத்துலயும் எடப்பாடிதான் ஃபர்ஸ்ட்- எலக்ஷனில் எப்படி?
Tamil Nadu Assembly Election 2026: தகிக்கும் தேர்தல் களம்.. எல்லாத்துலயும் எடப்பாடிதான் ஃபர்ஸ்ட்; களத்தில் அதிமுக- எலக்ஷனில் எப்படி?

பிரதான எதிர்க் கட்சியாக தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல், தேர்தல் பிரச்சாரம் என சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாய்க் களமிறங்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் முழுவீச்சில் தொடங்கிவிட்டன. ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்னும் ஒரு மாதம் கூட முழுதாக இல்லை என்பதால், கட்சிகள் பணியில் பரபரவென இறங்கியுள்ளன.
மெகா கூட்டணி திமுக
தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக, 23 கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியை அமைத்துள்ளது. அதிமுக 7 கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமைத்துள்ளது.
திமுக சார்பில் தொகுதிப் பங்கீடு மட்டுமே நிறைவுபெற்றுள்ளது. வேட்பாளர் பட்டியலோ, தேர்தல் அறிக்கையோ இதுவரை வெளியிடப்படவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலோ, திமுக போட்டியிடும் தொகுதி வேட்பாளர் பட்டியலோ இதுவரை வெளியாகவில்லை. அதேபோல திமுக தேர்தல் அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல்
அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே 3 கட்டமாக அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல நேற்று (மார்ச் 24) காலை கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை அறிவித்த எடப்பாடி, சூட்டோடு சூடாக மாலையே முழுமையான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை, மகளிருக்கு மாதாமாதம் ரூ.2 ஆயிரம், கல்விக் கடன் தள்ளுபடி என பல்வேறு அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
பிரச்சாரத்தைத் தொடங்கிய ஈபிஎஸ்
தொடர்ந்து இன்று (மார்ச் 25) காலை முதல்கட்டமாக அதிமுக சார்பில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஈபிஎஸ் வெளியிட்டார். பின்பு இன்று மாலை மைலாப்பூரில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 1 தொகுதி மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மைலாப்பூரில் பாஜக களம் காண்கிறது. இதனிடையே பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் மைலாப்பூரில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. தமிழிசை செளந்தர்ராஜனுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
நாம் தமிழர் கட்சி ஏற்கெனவே வேட்பாளர் அறிமுகக் கூட்டம் செய்யப்பட்டு, பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்டது. தவெக சார்பில் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு விஜய் இதுவரை எதுவும் பேசவில்லை. வேட்பாளர் பட்டியலும் இதுவரை வெளியாகவில்லை.
எலக்ஷனில் எதிரொலிக்குமா?
இந்த நிலையில் பிரதான எதிர்க் கட்சியாக தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல், தேர்தல் பிரச்சாரம் என சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாய்க் களமிறங்கி உள்ளார். இந்த வியூகங்கள் அனைத்தும் எலக்ஷனில் எந்த அளவு எதிரொலிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ட்ரெண்டிங் செய்திகள்




















