செளமியா அன்புமணி தேர்தலில் போட்டியா? - அண்ணாமலையார் சன்னதியில் வேட்பாளர் பட்டியல் - சிறப்பு வழிபாடு ரகசியம் என்ன?
பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அண்ணாமலையார் சன்னதியில் வைத்து சிறப்பு வழிபாடு செய்த செளமியா அன்புமணி.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சௌமியா அன்புமணி தனது மகளுடன் பாமக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
திருக்கோவில் வலம் வந்து பூஜை செய்து கொண்டு சென்ற சௌமியா அன்புமணி.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.
பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரும் பாமக தலைவர் அன்புமணி மனைவியுமான சௌமியா அன்புமணி தனது மகளுடன் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தார். கோவிலுக்கு வருகை தந்த அவர், சம்மந்த விநாயகர் சன்னதியில் தரிசனம் செய்து அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் சன்னதிக்கு சென்று பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அண்ணாமலையார் சன்னதியில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்து நவகிரகங்களை வழிபட்டார். சௌமியா அன்புமணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து கோவில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்களை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில், நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு சிரித்தபடி எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக சென்றார்.
இன்றைய தினம் திருக்கோவிலுக்கு வந்திருந்த சௌமியா அன்புமணி தனது கையில் வைத்திருந்த கவரில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்ற அச்சிடப்பட்ட கவரை கையில் பத்திரமாக வைத்துக் கொண்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசித்த அவர் பின்னர் அதனை பயபக்தியுடன் கொண்டு சென்றார்.




















