Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health Update: என் தந்தை நூறு வயது நன்றாக இருக்க வேண்டும், ஒரு மகனாக, கட்சித் தலைவனாக, மருத்துவராக அவருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்- அன்புமணி

என்னுடைய தந்தை இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம், உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் திமுகவின் கைக்கூலிகள் ஆன துரோகிகள் என்று பாமக தலைவர் ராமதாஸ் சாடியுள்ளார்.
கடலூரில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
’’என்னுடைய தந்தை ராமதாஸ் நலமாக இருக்கிறார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் தொடர்ந்து கேட்டு அறிந்து வருகிறேன்.
அவருக்கு வெர்ட்டிகோ பிரச்சினை இருக்கிறது. அது பழைய பிரச்சினைதான். எழுந்தால் அவருக்கு மயக்கம் வரும். அதற்கு மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
ராமதாஸ் நிலைக்கு யார் காரணம்?
என்னுடைய தந்தை இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம், உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் திமுகவின் கைக்கூலிகள் ஆன துரோகிகள். பணத்தை வாங்கிக்கொண்டு இவ்வாறு செய்துள்ளார்கள்.
என் தந்தை நூறு வயது நன்றாக இருக்க வேண்டும், ஒரு மகனாக, கட்சித் தலைவனாக, மருத்துவராக அவருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். எனக்கு யாரும் ஆலோசனை சொல்ல வேண்டாம்.
திமுகவுக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் ஏன் உரிய ஊக்கத்தொகை கொடுக்கவில்லை. ஒரு குவின்டால் நிலை உற்பத்தி செய்வதற்கு 2450 ஆகிறது. ஆனால் ஒரு குவின்டால் நெல்லுக்கு அரசு கொடுப்பது 2500 ரூபாய் மட்டுமே.
ஒரு குவின்டால் நெல்லுக்கு ஒடிசா அரசு ஊக்கத்தொகையாக 800 ரூபாய் கொடுக்கிறது. தெலுங்கானா அரசு 500 ரூபாய் கொடுக்கிறது.. ஆனால் தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஊக்கத் தொகையாக 130 ரூபாய் மட்டுமே வழங்குகிறது.
விவசாயிகள் திமுகவை தூக்கி எறிய போகிறார்கள்
திமுகவை விவசாயிகள் மன்னிக்கப் போவது கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் முடிவு செய்து விட்டார்கள் திமுகவை தூக்கி எறிய போகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை முதலில் பேசி பார்த்தார். அது எடுபடவில்லை காரணம் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, அதனால் அது எடுபடவில்லை. அதனால் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து பேச தொடங்கி இருக்கிறார்.
இதுதான் திமுக
நாடாளுமன்ற தேர்தலில்தான் திமுகவிற்கும் பாஜகவிற்கும் போட்டி. ஆனால் இது சட்டமன்றத் தேர்தல். இதில் திமுகவுக்கும் அதிமுக கூட்டணிக்கும்தான் போட்டி. ஆனால் ஸ்டாலின் வேண்டுமென்றே பிஜேபி பிஜேபி என்று பேசிக் கொண்டிருக்கிறார். இது தவிர எடப்பாடி பழனிச்சாமி மீது தனி நபர் விமர்சனத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள், இதுதான் திமுக. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
கடலூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு நன்மை செய்வதை விடுத்துவிட்டு விவசாய நிலங்களை பிடுங்கி நிறுவனங்களுக்கு கொடுக்கக்கூடிய புரோக்கராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
போராட்டத்தில் ஈடுபடும் 200 மக்களை அப்புறப்படுத்த ஆயிரம் போலீசாரை களத்தில் இறக்குகிறார்கள். நிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு சாப்பாட்டிற்கு என்ன செய்யப் போகிறார்கள்?
இதெல்லாம் ஒரு ஆட்சியா?
அறிஞர் அண்ணாவின் கொள்கையே மதுவிலக்கு கொள்கைதான்.. அண்ணா தொடங்கிய கட்சியில் முதல் முறையாக ஒரு வார்த்தை கூட மதுவைப் பற்றி பேசவில்லை. ஒரு வார்த்தை கூட போதை ஒழிப்பை பற்றி பேசவில்லை. இதெல்லாம் ஒரு கட்சியா? இதெல்லாம் ஒரு ஆட்சியா? இது ஒரு தேர்தல் அறிக்கையா? இந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்ததே கனிமொழிதான்..
இந்தியாவிலேயே அதிகமான கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள், அதிகமான விதவைகள் வாழும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















