மயிலாடுதுறையில் ‘கை’ கொடுத்தவருக்கே ‘கை’ காட்டும் காங்கிரஸார்.. சொந்தக் கட்சி எம்பி-க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..
மயிலாடுதுறை தொகுதிக்கு வெளிமாநில வேட்பாளரை எம்பி சுதா பரிந்துரை செய்ததாக கூறி காங்கிரஸ் கட்சியினர் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு, காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராகப் பரிந்துரை செய்ததாகக் கூறி, தற்போதைய மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சுதா மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைமையைக் கண்டித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பின்னணி என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகுதியின் வேட்பாளராக ஜமால் முகமது யூனுஸ் என்பவர் அறிவிக்கப்பட்டார். இவர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதும், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்ததிலிருந்து உள்ளூர் காங்கிரஸார் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த வேட்பாளர் தேர்வுக்குப் பின்னால் மயிலாடுதுறை எம்பி ஆர். சுதாவின் பரிந்துரை இருப்பதாகத் தகவல் பரவிய நிலையில், அது தற்போது போஸ்டர் யுத்தமாக மாறியுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்
மயிலாடுதுறை நகரின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் அரசு அலுவலகச் சுவர்களில் "மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அனைத்து பிரிவுகள் மற்றும் நிர்வாகிகள்" என்ற பெயரில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கட்சி மேலிடத்தை அதிரவைத்துள்ளன.

"கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!! வன்மையாக கண்டிக்கிறோம்!! மயிலாடுதுறை சட்டமன்ற வேட்பாளராக மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை விட்டு விட்டு வெளி மாவட்டத்தில் உள்ள அடையாளம் தெரியாத, கட்சிக்கு உழைக்காத, தொகுதியைப் பற்றி அறியாத புது வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ் மாநில தலைமையையும், அதற்குத் துணைபோன வழக்கறிஞர் R.சுதா MP அவர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்."
இத்தகைய கடுமையான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், கட்சியின் தேசியத் தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளது.
எம்பி ஆர். சுதா மீது குவியும் குற்றச்சாட்டுகள்
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்பி ஆர். சுதா, சிறுபான்மையினருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காகவே இவர் தேர்வு செய்யப்பட்டார் என்றும், இவர் பக்கத்திலுள்ள ஆடுதுறையைச் சேர்ந்தவர் என்றும் விளக்கம் அளித்தார். ஆனால், இந்த விளக்கத்தை உள்ளூர் நிர்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
நிர்வாகிகளின் குற்றச்சாட்டுகள்
தொகுதி அறியாத எம்பி: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்து வெற்றி பெற்ற ஆர். சுதா, இதுவரை தொகுதி மக்களைச் சந்திக்காமல் 'பேஸ்புக் அரசியல்' மட்டுமே செய்து வருகிறார்.
புவியியல் அறிவு இன்மை: வேட்பாளர் ஆடுதுறையைச் சேர்ந்தவர் என எம்பி கூறுகிறார். ஆனால் ஆடுதுறை என்பது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. தொகுதியின் எல்லை கூடத் தெரியாமல் ஒரு வெளிமாவட்டக்காரரைப் பரிந்துரை செய்தது ஏன்?
உள்ளூர் புறக்கணிப்பு: மயிலாடுதுறையிலேயே பல தகுதியான சிறுபான்மையினர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், அவர்களைத் தவிர்த்துவிட்டு அறிமுகமில்லாத ஒருவருக்கு சீட் வாங்கி கொடுத்தது கட்சிக்குச் செய்யும் துரோகம்.
நிர்வாகிகளின் ஆவேசம்
இது குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சி நகர பொதுச்செயலாளர் வனிதா, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்பழகன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் எம்.எம்.எஸ்.ஏ. பசுருதீன் ஆகியோர், "கடந்த காலத் தவறுகளில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. சொந்தக் கட்சியினரையே மதிக்காத போக்கை மாநிலத் தலைமை கைவிட வேண்டும். இந்தத் தவறான வேட்பாளர் தேர்வால் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது என்பது சந்தேகமே" எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.
தேர்தல் களத்தில் பாதிப்பு?
மயிலாடுதுறையில் திமுக கூட்டணி பலமாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள இந்த உள்கட்சி மோதல் மற்றும் "வெளிமாவட்ட வேட்பாளர்" என்ற முத்திரை, எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக அமையும் சூழல் உருவாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இதற்கு மேல் தலைமை தனது முடிவை எடுக்க போகிறது என்று தெரியாத நிலையில், தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் என்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வரும் நிலையில், காங்கிரஸ் மாநிலத் தலைமை இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





















