மயிலாடுதுறையின் புதிய நம்பிக் 'கை'.. காந்தியடிகளுக்கே காசோலை வழங்கிய குடும்ப வாரிசு: யார் இந்த ஜமால் முகமது யூனுஸ்?
மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ ராஜ்குமாருக்குப் பதில், அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் குறித்த தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்திய காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமாருக்கே மீண்டும் சீட் கிடைக்கு என எதிர்பாத்த நிலையில் பல்வேறு பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் வேறு மாவட்டத்தை சேர்ந்த நபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மட்டும் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்பி வேட்பாளர் ஃபார்முலா..
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போதும் தொகுதியை சேர்ந்த நபருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கும்மிடிப்பூண்டி சேர்ந்த சுதா தமிழகத்தில் கடைசி வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அப்போது அவர் வெளியூர் நபர் என விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது சட்டமன்ற தொகுதி வேட்பாளரையும் அதே ஃபார்முலாவை பயன்படுத்தி காங்கிரஸ் தொகுதிக்கு வெளியில் இருந்து வேட்பாளரை இறக்கியுள்ளது.
ஆனால், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்பதாலும் தொடர்ந்து தற்போது சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் என்பதால் மாவட்ட திமுகவினர் இந்த முறை மயிலாடுதுறை தொகுதி திமுகவிற்கு ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இருந்தாலும் அது திமுகவிற்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிகே திமுக தலைமை சீட்டு வழங்கியுள்ளது. இந்த சூழலில் நேற்று அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தஞ்சாவூரை சேர்ந்த ஜமால் முகமது யூனுஸ் என்பவர் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
யார் இந்த காங்கிரஸ் வேட்பாளர்?
மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி எப்போதும் தமிழக அரசியலில் ஒரு முக்கிய மையமாக இருந்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரு புதிய அரசியல் வரவாகவும், தொகுதியின் பெரும் எதிர்பார்ப்பாகவும் உருவெடுத்துள்ளார் ஒய். என். ஜமால் முகமது யூனுஸ். "மயிலாடுதுறையின் புதிய நம்பிக்கை" என்ற முழக்கத்துடன் களம் காணும் இவர், கல்வி, பொருளாதாரம் மற்றும் தேசப்பற்று மிக்க ஒரு வரலாற்றுப் பின்னணியில் இருந்து வந்துள்ளார்.
தேசப்பற்றுமிக்க குடும்பப் பின்னணி
ஒய்.என்.ஜமால் முகமது யூனுஸ் குடும்பம், தமிழகத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஒரு நூற்றாண்டு கால மகத்தான வரலாற்றைக் கொண்டது. இவரது கொள்ளுப் பாட்டனார், புகழ்பெற்ற தேசபக்தர் ஜமால் முகமது சாஹிப் ஆவார். 1921-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஜமால் முகமது சாஹிப் தேசப்பணியின் உச்சமாக, எத்தொகை வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளக்கூடிய கையெழுத்திட்ட காசோலையை காந்தியடிகளிடம் வழங்கிய பெருமைக்குரியவர் என கூறப்படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே தேசப்பணியில் ஈடுபட்டு வரும் இந்தக் குடும்பத்தின் நான்காவது தலைமுறை பிரதிநிதியாக ஜமால் முகமது யூனுஸ் இன்று அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார்.
கல்விச் சேவையும் சமூக மாற்றமும்
"கல்வியே சமூக மாற்றத்திற்கான மிகச்சிறந்த ஆயுதம்" என்பதில் இவரது குடும்பம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரி, சென்னை பெரம்பூரில் உள்ள ஜமாலியா மேல்நிலைப் பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆடுதுறையில் உள்ள கிரசன்ட் பள்ளி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கிய பாரம்பரியத்தில் வந்தவர் ஜமால் முகமது யூனுஸ். கல்வி நிறுவனங்களை நிர்வகித்த அனுபவத்தைக் கொண்டு, மயிலாடுதுறை தொகுதியின் கல்வித் தரத்தை உயர்த்துவதையும், மாணவர்கள் நவீன உலகிற்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கான வசதிகளை உருவாக்குவதையும் இவர் தனது முக்கிய இலக்காகக் கொண்டுள்ளார்.
இளம் ஆளுமையின் கல்வி மற்றும் தொழில் தகுதி
38 வயதான ஜமால் முகமது யூனுஸ், ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் பொன்னையா ராமஜயம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பயின்றவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர். இது அனைத்துத் தரப்பு மக்களுடனும், அதிகாரிகளுடனும் ஆழமான தொடர்பைப் பேண இவருக்கு உதவும். தற்போது 'JMY Real Estate and Developers' நிறுவனத்தின் உரிமையாளராக வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் திகழ்கிறார். இவரது இந்த வணிக அனுபவம், தொகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறைக்கான தொலைநோக்குப் பார்வை
மயிலாடுதுறை தொகுதியின் தற்போதைய தேவைகளை உணர்ந்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீர்வுகளை வழங்க இவர் திட்டமிட்டுள்ளார். ஒரு பொறியாளராகவும் தொழில்முனைவோராகவும், இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பு வசதிகளைத் தொகுதியிலேயே உருவாக்குவது தனது முதன்மையான நோக்கம் என இவரது தரப்பு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட மக்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருக்கும் இவர், தொகுதியின் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளார். தனது குடும்பம் தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும் மக்கள் சேவையை, இன்றைய காலத்திற்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப உதவியுடன் மக்களிடம் கொண்டு சேர்க்க இவர் விரும்புகிறார்.





















