விஜய், கிருஷ்ணசாமிக்கு ஒரே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் தரமான பதிலடி - பரபரப்பு பிரஸ்மீட்
. கடந்த தேர்தல்களில் எத்தனை ஓட்டு வாங்கினார்கள் என்பதை வைத்துதான் இடங்களை ஒதுக்க முடியும் என்று கிருஷ்ணசாமிக்கு இபிஎஸ் பதில்.

திமுக - தவெக இடையேதான் நேரடிப் போட்டி என்று விஜய் சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அதிக தொகுதிகளை வழங்காததால் புதிய தமிழகம் கூட்டணியில் இருந்து விலகி தனியாக போட்டியிடுவதாக அறிவித்தது. இதன்பிறகு 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்தார். மேலும், தேவேந்திர குல வேளார் மக்களை அதிமுக அமதித்துவிட்டதாகவும் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், கிருஷ்ணசாமியின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “கூட்டணி தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி என்னுடன் பேசவில்லை. நேரடியாக பேசாமல் வேறு ஒருவர் மூலம் 10 சீட் கேட்டார். பிறகு 5 சீட் வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டார்; ஆனால் முடியாது என்று சொல்லிவிட்டோம். புதிய தமிழகம் 33 தொகுதிகளில் போட்டியிட்டு 33,000 வாக்குகளையே பெற்றுள்ளது. கடந்த தேர்தல்களில் எத்தனை ஓட்டு வாங்கினார்கள் என்பதை வைத்துதான் இடங்களை ஒதுக்க முடியும்” என்றார்.
மேலும், திமுக - தவெக இடையேதான் நேரடிப் போட்டி என விஜய் கூறியதற்கு, விஜய் சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும் என்று பதிலளித்தார். மேலும், அதிமுகவில் கடுகளவு கூட பிரச்சனையில்லை. திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவினர்தான் மனவருத்தத்தில் இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.




















