எடப்பாடி ஒரு முரட்டு அடிமை; ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி நடக்கும் - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
இந்தியாவில் நம்பர் ஒன் மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி தான், அதிமுக ஆட்சிக்கு வந்தால், டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை ரிமோட் கண்ட்ரோல் போல இயக்குவார்கள் !

விழுப்புரம்: இந்த தேர்தலில் தமிழ்நாடு அணி மீண்டும் வெற்றிபெற வேண்டும். எடப்பாடி ஒரு முரட்டு அடிமை. இந்தியாவில் நம்பர் ஒன் மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி தான்: அதிமுக ஆட்சிக்கு வந்தால், டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை ரிமோட் கண்ட்ரோல் போல இயக்குவார்கள், உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் வசந்தவேலுவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வசந்தவேலுவை ஆதரித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு வந்துள்ளேன். 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வசந்தவேலுவை வெற்றி பெற செய்ய வேண்டும். ஆறு நாளில் 36 தொகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்துள்ளேன். நானும் ஒரு சட்டமன்ற வேட்பாளர். என் தொகுதிக்கு ஒரு நாள் தான் சென்றுள்ளேன். என் தொகுதி வெற்றியை விட உளுந்தூர்பேட்டை தொகுதி வெற்றி முக்கியம். தேர்தலுக்கு தேர்தல் மக்களை சந்திக்கும் இயக்கமல்ல திமுக. 365 நாட்களும் மக்களோடு இருக்கும் கட்சி திமுக. உளுந்தூர்பேட்டை தொகுதியில் கடந்த ஐந்தாண்டில் நடைபெற்ற நலத்திட்ட பணிகள் குறித்து பட்டியலை வாசித்தார்.
தொடர்ந்து அடுத்த ஐந்தாண்டுகளில் செய்யவிருக்கும் பணிகள் குறித்த பட்டியலையும் வாசித்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். காலை உணவு திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். கல்வி ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் 13 லட்சம் மாணவர்களுக்கு வழங்கி வருகிறார் முதல்வர். அதிமுக ஆட்சியிலேயே லேப்டாப் திட்டம் கைவிடப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஒரு கோடியே, 37 லட்சம் மகளிருக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டத்தை அதிமுக, பாஜகவினர் முடக்க நினைத்தனர். முதல்வர் மூன்று மாதத்திற்கு சேர்த்து மூன்றாயிரம், கோடைகால சிறப்பு நிதியாக இரண்டாயிரம் என 5 ஆயிரம் ரூபாயை ஒரு கோடி, 35 லட்சம் குடும்பங்களுக்கு கொடுத்துள்ளார். அடுத்த ஐந்தாண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கு 35 லட்சம் லேப்டாப் வழங்கப்படும். கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். ஆட்சிக்கு வந்தவுடன் எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்.
மகளிர் வீட்டிற்கு என்ன தேவையோ அதனை முடிவு செய்து வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் வளரும் மாநிலங்களில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு. இதற்கு பாஜக அரசு துணை நிற்கவில்லை. நமக்கான நிதியை, திட்டத்தை தரவில்லை. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி 3500 கோடி ரூபாயை புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் கொடுப்போம் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு அணி, டெல்லி அணி. தமிழ்நாடு அணி மீண்டும் வெற்றிபெற வேண்டும். எடப்பாடி ஒரு முரட்டு அடிமை. இந்தியாவின் நம்பர் ஒன் மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி தான்.
என் உயிரை வாங்குகிறார் உதயநிதி ஸ்டாலின். என பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. பிபி மாத்திரை போட்டுக் கொள்ளுங்கள். ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன் காலில் விழுந்தவர். பன்னீர்செல்வம் காலை வாரிவிட்டவர். தற்போது மோடி காலிலும் விழுந்துகிடக்கிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை ரிமோட் கண்ட்ரோல் போல இயக்குவார்கள். உளுந்தூர்பேட்டை தொகுதியில் 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் வசந்தவேலுவை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.




















