Aadhav Arjuna: "கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு வெற்றி சமர்ப்பணம்.." ஆதவ் அர்ஜுனா உருக்கம்
Tamil Nadu Election Results 2026: சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் திமுக - அதிமுக ஆகிய பலம் வாய்ந்த கட்சியை வீழ்த்தி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
தவெக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இன்று பேட்டி அளித்தார்.
மன்னராட்சி ஒழிக்கப்பட்ட நாள்:
அப்போது, அவர் கூறியிருப்பதாவது, பெண்களும் இளைஞர்களும் சேர்ந்த புரட்சி. 50 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் புதிய புரட்சி உருவாகிய நாள் இன்று. மன்னராட்சி ஒழிக்கப்பட்ட நாள். பிறப்பால் அதிகாரத்திற்கு வரும் குடும்ப ஆதிக்கத்திற்கு மக்களும், பெண்களும், இளைஞர்களும் முடிவு எழுதிய நாள்.
குறிப்பாக, எங்கள் தலைவரின் திருவாரூர் பரப்புரைக்கு பிறகு திமுக குடும்பம், மு,க.ஸ்டாலினும் கரூரில் எங்கள் குடும்பத்தில் 41 உயிர்களை இழப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த இந்த கொடிய திமுக ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய தமிழக பெண்களும், இளைஞர்களும் நாள் எண்ணிக்கொண்டிருந்தனர். எங்கள் தலைவர் பரப்புரையை முடக்கினர்.
மக்களுக்குத் தெரியும்:
10 எம்எல்ஏ-க்கள் கூட ஜெயிக்க முடியாது என்றும், தலைவர் மீது கடுமையான அவச்சொற்களும், எங்கேயும் பரப்புரை செய்ய முடியாது அளவில் ஒரு அரசே தவெக-விற்கு எதிராக நின்றது. நாடகமாடிய அரசு, இந்த குடும்பம் எந்தமாதிரி நாடகம் ஆடினார்கள்? ஊழல் மட்டுமே செய்திருந்தார்கள். எங்கள் தலைவரை கரூரில் இருந்து விமர்சனங்களும், அவமானங்களையும் ஏற்படுத்தினார்கள் என்பது தெரியும்.
தமிழக மக்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று 6 மாதமாகச் சொல்லியிருந்தோம். எங்கள் வாக்கு சதவீதம் 40 சதவீதத்தை தொடும் என்றோம். ஆனால், 75 வருட கட்சி, 50 வருட கட்சிகள் எள்ளி நகையாடினார்கள். ஆனால், நாங்கள் அமைதியான வழியில் எங்கள் திட்டங்களையும், ஒவ்வொரு பரப்புரையிலும் திமுக தவறுகளைச் சுட்டிக்காட்டி பெண்களுக்கான, இளைஞர்களுக்கான, மக்களுக்கான புதிய ஆட்சி இருக்கும்.
41 குடும்பங்களுக்கு சமர்ப்பணம்:
தலைவரின் பரப்புரை தமிழக அரசியலயே புரட்டிப்போட்டுள்ளது. இந்தியாவே எதிர்பார்க்காத வரலாறு. இந்த வரலாற்று வெற்றியை கரூரில் இழந்த எங்கள் 41 குடும்பத்தினரின் உறவுகளுக்கு சமர்ப்பிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு புதிய சக்தியாக வளர்ந்துள்ளது. தவெக-வைத் தொடங்கிய 2 வருடங்களுக்குள் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
விஜயின் மாஸ்..! கார் ஓட்டுனரின் மகனுக்கு கிடைத்த அந்தஸ்து - விருகையில் திமுகவை அலறவிட்ட சபரிநாதன்
ட்ரெண்டிங் செய்திகள்



















