TNTET Candidates Strike: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்; பின்னணி என்ன?
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் உள்ள டிபிஐ அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் உள்ள டிபிஐ அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் 10 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் உள்ளனர். இதற்கிடையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிப்பு வெளியானது. இதற்காக அரசாணை எண் 149 வெளியானது. எனினும் போட்டித் தேர்வுக்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தேர்வு நடத்தப்படவில்லை.
போட்டித் தேர்வு
அரசாணை எண் 149 வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக 2022ஆம் ஆண்டு தேர்வு குறித்த அறிவிப்பு மீண்டும் வெளியானது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்துத் தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று கூறியும் போட்டித் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராடி வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் உள்ள டிபிஐ அலுவலக வளாகத்தில், அவர்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், ''ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; அதை தமிழக அரசு ஏற்க மறுப்பது நியாயமற்றது. தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவது மனிதநேயமற்ற செயலாகும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு மட்டும் தான் நடத்தப்படுகிறது; கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு தகுதித் தேர்வு மட்டும்தான் நடத்தப்படுகிறது. ஆனால், அந்த பணிகளை விட குறைந்த கல்வித் தகுதியும், ஊதியமும் கொண்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் தகுதித் தேர்வு, பின்னர் போட்டித்தேர்வு என்பதை ஏற்க முடியாது. இது பெரும் அநீதி!
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது தான் தகுதி ஆகும். 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தர வரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதே நிலையே இப்போதும் தொடர வேண்டும் என்பது தகுதித் தேர்வில் வென்றவர்களின் கோரிக்கை. அதை ஏற்று அவர்களுக்குப் பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























