இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு; அமைச்சர் அறிக்கை, முக்கிய அறிவிப்பு!
கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்- இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிக்கையில், ’’விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்பட இருக்கின்றது. அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களது ஊதியப்பிரச்சினை சார்ந்த முடிவு எடுக்கப்படும். போராட்டக்களத்தில் இருக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பி கற்பித்தல் பணிகளில் ஈடுபடக் கேட்டுக் கொள்கின்றேன்.
இது நம்முடைய அரசு என முதல்வரின் மீது நம்பிக்கை வைத்து போராட்டங்களில் ஈடுபடாமல் மாணவர்களது கற்றல் பாதிக்கப்படாமல், பள்ளிக்குத் தொடர்ந்து சென்று கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
மொத்தமுள்ள இடைநிலை ஆசிரியர்களில் பள்ளிப்பணிகளுக்கு செல்லாமல் இருக்கின்ற 5781 ஆசிரியர்களையும் கற்பித்தல் பணிக்கு திரும்ப கேட்டுக் கொள்கின்றேன்’’ என்று தெரிவித்து இருந்தார்.
தற்காலிகமாக ஒத்திவைப்பு
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து இயக்கத்தினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’சம வேலைக்கு சம ஊதிய போராட்டம் சார்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதன் அடிப்படையிலும் நமது அரசு மற்றும் தமிழக முதல்வர் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதின் அடிப்படையிலும் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
கற்பித்தல் பணியில் சிறப்பாக ஈடுபடுவோம்
கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.
























