நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..!
அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்வுக்கான மதிப்பெண்பட்டியலை வெளியீட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

சென்னை: தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் பணிகளின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அதேபோல் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி நியமன உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகள், இறுதி விடைக்குறிப்பு மற்றும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் தற்போது வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு எழுதியவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு பின்னணி மற்றும் பங்கேற்பு விவரங்கள்
கடந்த 2025 அக்டோபர் 16 அன்று, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு (அறிவிப்பு எண்: 04/2025) வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2025 டிசம்பர் 27 அன்று தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் மிக பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்த உதவிப் பேராசிரியர் பணி நியமனத் தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியுடைய 47,047 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் 42,064 விண்ணப்பதாரர்கள் நேரடியாக எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சேபனை மனுக்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்பு
எழுத்துத் தேர்வு முடிவுற்றதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களின் சுயமதிப்பீட்டிற்காக Part A & Part B ஆகிய இரு பகுதிகளுக்கான உத்தேச விடைக்குறிப்பு (Tentative Answer Key) 'ஆட்சேபனை கண்காணிப்பு வசதியுடன்' (Objection Tracker) கடந்த 2026 ஜனவரி 5 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
விடைக்குறிப்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகள் இருப்பின், அது குறித்த ஆட்சேபனை மனுக்களைத் தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு 2026 ஜனவரி 5 முதல் ஜனவரி 13 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
விண்ணப்பதாரர்களால் உரிய மற்றும் தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விதமான ஆட்சேபனை மனுக்களும், அந்தந்த பாடப்பிரிவுகளுக்கான உயர்மட்ட பாட வல்லுநர்களால் (Subject Experts) மிகத் தீவிரமாகவும் முழுமையாகவும் பரிசீலிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்பு (Final Answer Key) தயாரிக்கப்பட்டு, கடந்த 25.06.2026 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு: பாட வல்லுநர்களால் தற்போது வழங்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த இறுதி விடைக்குறிப்பே இறுதியானது ஆகும். இது சார்ந்த எவ்வித ஆட்சேபனை கோரிக்கை மனுக்களையும் இனிவரும் காலங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்ளாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண்கள் வெளியீடு
பாட வல்லுநர்களால் அங்கீகரிக்கப்பட்ட இறுதி விடைக் குறிப்பின் (Final Answer Key) அடிப்படையில், தேர்வர்களின் வினாத்தாட்கள் அனைத்தும் மிகத் துல்லியமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திற்குச் சென்று தங்களின் விவரங்களைப் பதிவிட்டு எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பணி அனுபவ மதிப்பெண்
எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவர்களுக்கான அடுத்தகட்டப் பணிகள் குறித்த வழிகாட்டுதல்களையும் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் போது, 'பணி அனுபவத்திற்காக' (Teaching Experience) கூடுதல் மதிப்பெண் கோரியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, அதற்கான மதிப்பெண்கள் உடனடியாக வழங்கப்பட மாட்டாது. அவர்களின் அசல் ஆவணங்கள் அனைத்தும் மதிப்பீட்டுக் குழுவினால் முறையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே அதற்கான இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படும்.
அசல் ஆவணங்கள் சரிபார்ப்பின் போது (Original Certificate Verification), விண்ணப்பதாரர்கள் தங்களின் பின்வரும் முக்கியச் சான்றிதழ்களைத் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் (Original Educational Certificates)
* முறையான பணி அனுபவ சான்றிதழ் (Teaching Experience Certificate)
* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) கல்வித் தகுதிகளுக்கான 'இணைத்தன்மை அரசாணை' (Equivalence Government Order)
* M.Phil / Ph.D ஆகிய உயர்கல்வித் தகுதிகள் தொடர்பான உரிய பொருண்மைச் சான்றுகள் (Relevance Certificates)
கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தலைமையிலான நிபுணர் குழு
விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் இந்த அசல் சான்றிதழ்கள் அனைத்தும், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் (Joint Director of Collegiate Education) தலைமையிலான உயர்மட்ட நிபுணர் குழுவினால் மிகத் தீவிரமாகச் சரிபார்க்கப்படும். இந்நிபுணர் குழுவினால் முழுமையான ஆய்வுக்குப் பிறகு, பணி அனுபவத்திற்காக வழங்கப்படும் மதிப்பெண்கள் மட்டுமே இறுதியானதாகக் கருதப்படும்.
மேலும், அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு முடிவடைந்ததற்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு புதிய ஆவணங்களோ அல்லது கூடுதல் மதிப்பெண் கோரும் கோரிக்கை மனுக்களோ எக்காரணம் கொண்டும் வாரியத்தால் பரிசீலிக்கப்படமாட்டாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு
தற்போது தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு (Certificate Verification) நடைபெறவுள்ளது. இந்தச் சரிபார்ப்பு நடைபெறும் இடம், தேதி மற்றும் நேரம் குறித்த முழுமையான விவரங்கள் மிக விரைவில் வாரியத்தின் இணையதளத்தில் தனியாக அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். தேர்வர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (trb.tn.gov.in) தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























