திருக்குறள் முற்றோதல் பரிசு: ரூ.15,000 வெல்லும் வாய்ப்பு! மயிலாடுதுறை மாணவர்களுக்கு அழைப்பு, கடைசி நாள் எப்போது?
திருக்குறள் முற்றோதல் பரிசுத் திட்டத்தில் கலந்துகொண்டு மயிலாடுதுறை மாவட்ட மாணவர்கள் ரூ.15,000 பரிசினை பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை: உலகப் பொதுமறையாம் திருக்குறளின் அரிய கருத்துக்களை மாணவ, மாணவியர் முழுமையாக அறிந்து கொண்டு, கல்வியறிவுடன் சிறந்த ஒழுக்கம் மிக்கவர்களாக சமுதாயத்தில் மிளிரும் வகையில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையானது ஆண்டுதோறும் "திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டத்தை" செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.15,000/- பரிசுத் தொகையும் அதற்கான பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இந்த உயரிய திட்டத்தின் கீழ், 2025-26-ஆம் ஆண்டிற்கான "திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு" பெறுவதற்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.
தகுதி மற்றும் கூடுதல் திறன்
முற்றோதல் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்குக் கட்டாயம் இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் பின்வருமாறு:
*முற்றோதல் திறன்: மாணவ, மாணவியர் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் பிழையின்றி ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
*கூடுதல் தகுதிகள்: குறள் முற்றோதல் மட்டுமல்லாமல், கீழ்க்கண்ட அம்சங்களை அறிந்திருந்தால் அது கூடுதல் தகுதியாகக் கொள்ளப்படும்:
* திருக்குறளில் உள்ள இயல் எண்.
* அதிகாரம் மற்றும் குறள் எண்.
* குறளின் பொருள்.
* திருக்குறளின் அடைமொழி மற்றும் சிறப்புகள்.
* திருக்குறளுக்கு உரை எழுதியோர் போன்ற விவரங்கள்.
தேர்வு நடைமுறைகள்
முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு (நேர்காணல்) உட்படுத்தப்படுவார்கள். நேராய்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியரின் பட்டியல், திருக்குறள் பரிசுக்குரியோராகத் தேர்வு செய்யப்பட்டு, சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்குப் பரிந்துரைக்கப்படும்.
முக்கிய குறிப்பு: ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் இதில் கலந்து கொள்ள இயலாது.
விண்ணப்பிக்கும் வழிமுறை மற்றும் காலக்கெடு:
"திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்" திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் (Online) மட்டுமே பெறப்படும். எனவே, விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
* இணையதள விண்ணப்பம்: விண்ணப்பதாரர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளமான https://tamilvalarchithurai.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
* நகலை அனுப்புதல்:
இணையவழியில் விண்ணப்பித்த பின், அந்த விண்ணப்பத்தின் நகலை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் தளத்தில் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.
* மின்னஞ்சல்: நேரில் சமர்ப்பிக்க இயலாதவர்கள், adnnt.nagai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் விண்ணப்பத்தின் நகலை அனுப்பி வைக்கலாம்.
கடைசி நாள்: இணையவழியில் விண்ணப்பித்த நகலை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.10.2025 ஆகும்.
திருக்குறள் மீது ஆர்வம் கொண்டு, 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்துள்ள மயிலாடுதுறை மாவட்டப் பள்ளி மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழக அரசின் ரூ.15,000 பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், 8637679087என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






















