மாணவர்களே.. கல்லூரிகளில் இலவசமாக படிக்கலாம்; சென்னைப் பல்கலை. அழைப்பு- சேர்வது எப்படி?
இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித்திட்டம் 2025- 2026 கீழ் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- இந்த இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2024-2025 கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மாணவர்கள் முதல் முயற்சியிலேயே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாவது மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
- வருவாய் துறை வட்டாட்சியர் வழங்கிய வருமான சான்றிதழின்படி, மாணவரின் குடும்ப வருட வருமானம் ரூபாய் மூன்று லட்சத்திற்கு (ரூ.3.00,000/-) மிகாமல் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 3 இலவச இருக்கைகள் ஒதுக்கப்படும் (அதாவது ஒவ்வொரு பிரிவின் கீழும் 1] இலவச இருக்கை). இவை பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு மேலே கூடுதல் இடங்களாக அனுமதிக்கப்படும்.
பிரிவு 1: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3 of seats) பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
பிரிவு 2: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3 of seats) முதல் பட்டதாரி மாணவர்கள், ஊனமுற்ற மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
பிரிவு 3: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3 of seats) முக்கிய பாடங்களில் 80% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் 1: 2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படூவார்கள்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
1) பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாவது மதிப்பெண் சான்றிதழ்,
2) சமீபத்திய வருமான சான்றிதழ் (ஒரு வருடத்திற்குள்) வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: 1 மற்றும் பிரிவு- 2 சேர்ந்த மாணவர்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்),
மாற்றுத்திறனாளி சான்றிதழ் - மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்),
இறப்பு சான்றிதழ் (பொருந்தினால்),
மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் பதிவேற்றம் செய்யத் தவறினால் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
(வருமானச் சான்றிதழ் அல்லது முதல் பட்டதாரி சான்றிதழ் கிடைக்கத் தாமதமானால் வட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஒப்புதல் சீட்டை பதிவேற்றம் செய்யலாம், சான்றிதழை கலந்தாய்வுக்கு வரும்பொழுது சமர்ப்பிக்கவும்)
இலவசக் கல்வித் திட்ட விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் (26.05.2025) பதிவேற்றம் செய்யவேண்டும்.
The last date for submission of online application is 26.05.2025.
https://egovernance.unom.ac.in/cbCS2526/UnomFreeEducation/login.aspx என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.unom.ac.in/






















