![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
KG Admission: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை எப்போது?- தாமதமாவதால் பெற்றோர்கள் அவதி
தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அரசு அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது.
![KG Admission: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை எப்போது?- தாமதமாவதால் பெற்றோர்கள் அவதி LKG, UKG Delayed admission in TN angavadis Govt School education department KG Admission KG Admission: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை எப்போது?- தாமதமாவதால் பெற்றோர்கள் அவதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/c6f7ef122d51e6d8e705a217235afaab1681821905332332_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அரசு அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
2018-ல் தொடங்கப்பட்ட மழலையர் வகுப்புகள்
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 2381 பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. அவர்களுக்கென தனி இருக்கைகள், தனி சீருடைகள் வழங்கப்பட்டு வந்தன. கிராமப் புறங்களில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் மழலையர் வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கே மீண்டும் பணி மாறுதல் வழங்கப்பட்டது. இதன் பின்னர், எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் குறித்த முறையான வரையறைகள் வெளியாகவில்லை.
இதனால், அரசுப் பள்ளிகளில் மழலையர் மாணவர் சேர்க்கை குறித்துப் பள்ளிக் கல்வித்துறை தெளிவுபடுத்தக் கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில், அரசுப் பள்ளிகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாகத் தகவல் வெளியானது. தொடக்கக் கல்வித்துறையில் ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், தற்போது ஆசிரியர்களை 1ஆம் வகுப்பு முதல் பாடம் கற்பிக்கப் பயன்படுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.
2,381 அங்கன்வாடி மையங்களில், எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்தது. தொடக்கக் கல்வியில் டிப்ளமோ முடித்தவர்களை பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமனம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது ஏன்?
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அரசு மீண்டும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும் என்று அறிவித்தது. இந்த நிலையில், 1ஆம் வகுப்பு 9ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு நடைபெறுவதால், மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்ற நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறை சூழல் நிலவுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 17 முதல் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடக்கம்
தமிழ்நாட்டில் முதன்முறையாக 'குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். எதிர்காலத்தை வளமாக்குவோம்' எனும் பரப்புரையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்துள்ளது. அதன் பரப்புரை வாகனத்தை கொளத்தூரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இணைந்து நேற்று (ஏப்ரல் 17) தொடங்கி வைத்தனர். அத்துடன் பரப்புரை பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)