ஐஐடி சென்னையில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: இனி ஏஐ ஆராய்ச்சிகள் ஸ்டார்ட் அப்களாக மாறும்!
சென்னை ஐஐடியில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: செயற்கை நுண்ணறிவு சார் நிறுவனங்களை உருவாக்க திட்டம்

சென்னை ஐஐடியில் உள்ள வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி (WSAI), ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய ஏஐ, மெஷின் லேர்னிங் மற்றும் டேட்டா சயின்ஸ் நிறுவனங்களை உருவாக்குவதற்காக ஏஐ ஸ்டுடியோ என்ற புதிய தொழில்முனைவோர் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சுகாதாரம், கல்வி, பொறுப்பான ஏஐ மற்றும் இந்திய மொழிகளுக்கான ஏஐ ஆகிய துறைகளில் இந்த ஸ்டுடியோ சிறப்புக் கவனம் செலுத்தும். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனர்கள் தங்களின் யோசனைகளை வெற்றிகரமான வணிகமாக மாற்ற இது உதவும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் குழுக்களுக்கு ஆரம்பக்கட்ட நிதி, கிளவுட் வசதிகள், ஆய்வகப் பயன்பாடு, துறைசார் வல்லுநர்களின் வழிகாட்டுதல் மற்றும் சந்தைக்கு ஏற்ற தயாரிப்பாக மாற்றுவதற்கான ஆதரவு ஆகியவை வழங்கப்படும். இறுதியாக இவை ஐஐடிஎம் இன்குபேஷன் செல் அமைப்பிற்குள் கொண்டுவரப்படும்.
WSAI தலைவர் பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் கூறுகையில், "ஆராய்ச்சிகளை வெறும் கட்டுரைகளாக வெளியிடுவதோடு நிற்காமல், மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் அவற்றை நிறுவனங்களாக மாற்றுவதே எங்கள் நோக்கம்" என்றார்.
ஏஐ ஸ்டுடியோ சிஇஓ ரூபா கரேமுங்கிகர் பேசுகையில், "தொழில்நுட்பமும் இந்தியாவின் லட்சியங்களும் இணையும் இத்தருணத்தில், சந்தையின் உண்மையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நிறுவனங்களை உருவாக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார். இது ஐஐடி சென்னையின் முன்னோடி முயற்சி என கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் பள்ளி தலைவர் பேராசிரியர் சத்ய சேஷாத்ரி குறிப்பிட்டார்.
விண்ணப்ப முறை, தகுதிகள் என்னென்ன?
ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளி தொழில்முனைவோரும் தங்களின் ஏஐ, டேட்டா சயின்ஸ் யோசனைகளுடன் இதில் பங்கேற்கலாம்.
இதற்கான தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும். முதலில் அதிக அளவிலான விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, அதிலிருந்து சில சிறந்த திட்டங்கள் மட்டும் ஸ்டுடியோவின் 6 மாத கால முழுமையான திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படும். நிறுவனங்களுக்கான நிதி திரட்டும் நிலையில் இருப்பவர்களுக்கு, இத்திட்டம் மேலும் 3 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும்.
அக்.3 முதல்..
இதன் முதல் சுற்றிற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 3 அன்று தொடங்கவுள்ளன. ஆண்டுக்கு குளிர்காலம் மற்றும் வசந்த காலம் என இரு சுற்றுகளாக இந்த ஸ்டுடியோ செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஐஐடி சென்னை உருவாக்கியுள்ள டீப் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மொத்த மதிப்பு 8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதுடன், 11,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























