ஃபார்மசி, நர்சிங்.. டிப்ளமோ மாணவர் சேர்க்கை; டிச.2 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஃபார்மசி மற்றும் நர்சிங் தெரபி டிப்ளமோ படிப்புகளில் சேர மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள், டிசம்பர் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி படிப்புகள்
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ பட்டயப்படிப்புப் பள்ளிகளில் (சென்னை மற்றும் பாளையங்கோட்டை) உள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கான காலி இடங்கள் அனைத்திற்கும், 2024- 2025 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை https://tnhealth.tn.gov.in/ என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் இந்த இயக்குநரகத்திலோ. தேர்வுக் குழு அலுவலகத்திலோ வழங்கப்பட மாட்டாது. மேலும், அடிப்படைத் தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in/ என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.
முக்கியத் தேதிகள்
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 19.11.2024 முதல் 02.12.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்: 02.12.2024 மாலை 05.30 மணி வரை.
விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: "செயலர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106."

மாணவர் சேர்க்கை எப்படி?
* 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
* விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும்.
* மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வர வேண்டும்.
* கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்.
* கலந்தாய்வு அன்று நேரில் வரத் தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்து விடுவார்கள்.
* விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ்.பி.ஐ. இ- கலெக்ட் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
* கடைசித் தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், தபால் கூரியர் சேவையினால் ஏற்படும் கால தாமதத்திற்கு தேர்வுக் குழு பொறுப்பாகாது என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.






















