![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cyclone Michaung: மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணம்: ஆசிரியர்கள் எடுத்த அதிரடி முடிவு!
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
![Cyclone Michaung: மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணம்: ஆசிரியர்கள் எடுத்த அதிரடி முடிவு! Cyclone Michaung Teachers Per Day Salary Will Be Donated to Michaung Storm Relief - TAMS Cyclone Michaung: மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணம்: ஆசிரியர்கள் எடுத்த அதிரடி முடிவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/07/a5079265042baaa1e1d3fd0ffa1f32541701934632636332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக தமிழ்நாடு அரசிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்க உள்ளனர்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான கனமழை பெய்தது. இதில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், மழை வெள்ளத்தால் நிலைகுலைந்து போயின. இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ரூ.450 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்க உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது:
’’மிக்ஜாம் புயலால் எற்பட்ட வரலாறு காணாத மழை பொழிவின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முனைப்போடு எடுத்து வரும் சூழலில்தமிழக அரசோடு கைகோர்க்க அனைத்து அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு
இதை அடுத்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தங்களின் ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து வழங்க முன் வந்துள்ளனர்.
பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புயலால் அனைத்தையும் இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இது சிறு உதவியாக இருக்கும் என கருதுகிறோம். எனவே எங்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதற்குரிய தகுந்த செயல்முறைகளை வெளியிட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை வெகு விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்வதற்கு உதவிடும் வகையில் உரிய ஆணை பிறப்பிக்க தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.
கொரோனா காலத்தில் ரூ.1.50 கோடி நிதி
இதுகுறித்த எங்களின் முறையான கடிதத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி உள்ளோம். கடந்த காலங்களில் எப்போதெல்லாம் பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்கள்ஏ நடைபெற்றதோ அப்போதெல்லாம் எங்களின் ஒருநாள் ஊதியத்தினை வழங்கி மக்களோடு களத்தில் நின்றிருக்கிறோம். என் கடந்த கொரோனா பேரிடர் காலங்களில் கூட எங்கள் ஒரு நாள் ஊதியத்துடன் எங்கள் பேரியக்கத்தின் சார்பாக ரூபாய் 1,50,30,127 (ஒரு கோடியே ஐம்பது இலட்சத்து முப்பதாயிரத்து நூற்று இருபத்தேழு ரூபாய்) வழங்கி இருக்கிறோம்.
இது போன்ற பேரிடர் காலங்களில் இன்றும், அன்றும், என்றென்றும் தமிழக மக்கள் நலனுக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முதலில் முன்வந்து களத்தில் நிற்கும்’’.
இவ்வாறு வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)