CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!
Three Language Policy CBSE: மாணவர்கள் தேர்வு செய்யும் அந்த மூன்று மொழிகளில், குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீக மொழிகளாக இருக்க வேண்டியது அவசியம்.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து சிபிஎஸ்இ இணைவு பெற்ற பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு இணங்க இந்த அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது என்ன நடைமுறை?
தற்போதுள்ள நடைமுறையின்படி, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகளை மட்டுமே (பொதுவாக ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநிலத்தின் தாய்மொழி) முதன்மை மொழிப் பாடங்களாகப் படித்து தேர்வெழுதி வந்தனர். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே மூன்றாவது மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.
ஆனால் புதிய நடைமுறை அமலுக்கு வரும்போது, மாணவர்கள் கூடுதலாக மற்றொரு மொழியையும் தேர்வு செய்து, மொத்தம் மூன்று மொழிகளைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
மும்மொழிக் கொள்கை எப்படி அமல்?
இந்த புதிய மும்மொழிக் கொள்கையில் மிக முக்கியமான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாணவர்கள் தேர்வு செய்யும் அந்த மூன்று மொழிகளில், குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீக மொழிகளாக இருக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, ஒரு மாணவர் ஆங்கிலத்தை ஒரு பாடமாகத் தேர்வு செய்தால், மீதமுள்ள இரண்டு பாடங்களாக தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் போன்ற ஏதேனும் இரு இந்திய மொழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்திய மொழிகளின் தொன்மையையும், சிறப்பையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும், மாணவர்களிடையே பன்மொழிப் புலமையை வளர்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காகப் புதிய பாடப்புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் என்சிஇஆர்டி ஈடுபட்டுள்ளது. மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















