Crime: ரீசார்ஜ் பண்ணாமல் டிமிக்கி கொடுத்த காதலன்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிரண்மயி பயன்படுத்திய செல்போனுக்கு ரீசார்ஜ் முடிந்துள்ளது. அவருக்கு இன்னும் சம்பளம் வராததால் தன் காதலன் சந்துவிடம் சொல்லி ரீசார்ஜ் செய்யுமாறு கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் காதலன் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யாத கோபத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜீடிமெட்லாவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சந்து என்ற இளைஞரும், கிரண்மயி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கிரண்மயி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அழகுக்கலை நிபுணர் படிப்பை முடித்த நிலையில் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மற்றொரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வெங்கடேஷ் எலியாஸ் சந்து என்ற நபரை சந்தித்தார். இருவரது நட்பும் ஒரு கட்டத்தில் காதலாக பரிணாமம் அடைந்தது. அதன்பிறகு கடந்த ஓராண்டாக சந்து மற்றும் கிரண்மயி பிரசாந்த்நகரில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிரண்மயி பயன்படுத்திய செல்போனுக்கு ரீசார்ஜ் முடிந்துள்ளது. அவருக்கு இன்னும் சம்பளம் வராததால் தன் காதலன் சந்துவிடம் சொல்லி ரீசார்ஜ் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் சந்து வேலையாக இருந்தால் அதனை செய்யாமல் விட்டு விட்டார். இதனால் கிரண்மயி வருத்தப்பட்டுள்ளார். இருவரும் நேற்று இந்த சம்பவம் தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதில் மனமுடைந்த கிரண்மயி சந்து வெளியே சென்றிருந்த நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சந்து கிரண்மயி தற்கொலை செய்ததைக் கண்டு அலறியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிரண்மயி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை வழக்காக பதிவு செய்து சந்து மற்றும் அக்கம் பக்கத்தினர், கிரண்மயி அலுவலக நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கிரண்மயி தாய், தனக்கு வெங்கடேஷ் எலியாஸ் சந்து மீது சந்தேகம் இருப்பதாக கூறி புகாரளித்துள்ளார்.
போலீசார் வெளியிட்ட தகவலின்படி, கிரண்மயிக்கு கடந்த 2015ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட அவர் கணவரை பிரிந்தார். மகன் கிரண்மயி அம்மாவிடம் வளர்ந்து வரும் நிலையில் இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)
ட்ரெண்டிங் செய்திகள்





















