ஒத்த டீ கேட்டதுக்கு நாட்டு வெடிகுண்டா? விழுப்புரம் அருகே பயங்கரம்: வாலிபர் மீது பாய்ந்தது 'குண்டர் சட்ட' அதிரடி!
விக்கிரவாண்டி அருகே, டீ இல்லை என்று சொன்ன காரணத்திற்காக தேநீர் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய வாலிபர், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே, டீ இல்லை என்று சொன்ன காரணத்திற்காக தேநீர் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய வாலிபர், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
டீ இல்லை என கூறியதால் ஆத்திரம்: டீக்கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர்
விழுப்புரம் அருகே டீ இல்லை என்று சொன்னதற்காக ஆத்திரமடைந்து தேநீர் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சம்பவத்தின் பின்னணி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு (45). இவர் அதே பகுதியில் சொந்தமாக தேநீர் கடை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி இரவு, வேணு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை சாத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மூங்கில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்ற இளைஞர் கடைக்கு வந்து டீ கேட்டுள்ளார். அதற்கு வேணு, வியாபாரம் முடிந்துவிட்டது என்றும், தற்போது டீ இல்லை என்றும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நாட்டு வெடிகுண்டு வீச்சு:
ஆத்திரமடைந்த பூவரசன், தான் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை திடீரென வேணுவின் தேநீர் கடை மீது வீசினார். இதில் கடையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
காவல்துறை நடவடிக்கை:
பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் வேணு அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து பூவரசனை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாலும், பூவரசனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் (Goondas Act) கீழ் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட எஸ்பி சாய்பிரனீத் பரிந்துரை செய்தார்.
ஆட்சியர் உத்தரவு:
எஸ்பி-யின் பரிந்துரையை ஏற்று, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், பூவரசனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, இதற்கான ஆணை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு, பூவரசன் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
"சமூக அமைதிக்கு சவாலாக விளங்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும்" என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.























