கிரிக்கெட் விளையாட்டில் தகராறு.. ஆட்களை கூட்டி வந்து சிறுவனை கொலை செய்த நண்பன்!
உள்ளூர் பூங்கா ஒன்றில் திங்கட்கிழமை சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது இரு சிறுவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரண்டு பேரும் கைக்கலப்பில் இறங்கியுள்ளனர்.

டெல்லியில் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுவாக எந்த விதமான போட்டிகள் என்றாலும் அதில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. அதேபோல் களத்தில் ஏற்படும் மோதல்களும் போட்டியை மேலும் மெருகூட்டும் வகையில் பரபரப்பாக அமையும். ஆனால் சமீபகாலமாக விளையாட்டில் ஏற்படும் மோதல்கள் வன்முறைக்கான இடமாக மாறியுள்ளது. அப்படியான ஒரு சம்பவம் தான் மேற்கு டெல்லியின் திலக் நகரில் தான் நடைபெற்றுள்ளது. அங்குள்ள உள்ளூர் பூங்கா ஒன்றில் திங்கட்கிழமை சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது இரு சிறுவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இரண்டு பேரும் கைக்கலப்பில் இறங்கியுள்ளனர். இதில் அடி வாங்கிய சிறுவன் நேராக வீட்டிற்கு சென்று அங்கிருந்த தன் உறவுக்கார பையனை அழைத்து வந்துள்ளான். 3 பேரும் சேர்ந்து எதிர்தரப்பில் சண்டை போட்ட சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இரவு 7.20 மணியளவில் இந்த சண்டை வெடித்துள்ளது. இதில் 3 பேரும் அடித்ததில் எதிர் தரப்பு சிறுவன் கழுத்து மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தான்.
அக்கம் பக்கத்தினர் அந்த சிறுவனின் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் 3 சிறார் மீதும் திலக் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனடிப்படையில் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்த சிறுவன் பெயர் நிஷாந்த் என்றும், அவனின் தந்தை அப்பகுதியில் தேநீர் கடை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், நிஷாந்துக்கு 2 சகோதர்களும் உள்ளனர்.
சம்பவம் நடந்த உடனே அடி வாங்கிய சிறுவன் 2 பேரை அழைத்துக் கொண்டு நிஷாந்தை தேடி அவனின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவனின் தாய் ஜோதி என்னவென்று விசாரித்த நிலையில், சிறிது நேரத்தில் 3 பேரும் நிஷாந்தை அருகிலுள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்று சண்டைப் போட்டத்தை தட்டிக் கேட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே நிஷாந்த் மூச்சு பேச்சின்றி கிடப்பதாக வீட்டுக்கு தகவல் வந்துள்ளது.
நாங்கள் ஏதோ சிறுவர்கள் சண்டை என பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் விளையாட்டுக்கு மோதிக் கொண்டார்கள் என நினைத்து சத்தம் போட்டோம். இப்படி செய்யக்கூடாது என தாய் ஜோதி தெரிவித்துள்ளார். அதேசமயம் நிஷாந்த் மரணத்திற்கு நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற தாங்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும், எங்கள் தரப்பைச் சேர்ந்த சிலரை போலீசார் தாக்கியதாகவும் நிஷாந்த் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்





















