இதற்காகதான் மாணவியை கத்தியால் குத்தினேன் - சேலம் இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தினேன் என கைதான வாலிபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளியை சேர்ந்த 22 வயது இளம்பெண், கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இனாம்பை ரோஜியை சேர்ந்த ஐடிஐ முடித்து விட்டு வேலை தேடி வரும் மோகனபிரியன் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து நேரில் பார்க்காமலேயே செல்போனில் பேசி வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் மோகனபிரியனை மாணவி நேரில் பார்த்துள்ளார். அவரை நேரில் பார்த்ததும், உன்னை பிடிக்கவில்லை என மாணவி தெரிவித்துள்ளார். இது மோகனபிரியனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே உறவினருடன் மாணவிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்தனர். இதனால் மாணவி, மோகனபிரியனிடம் பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டார். இது மோகனபிரியனுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போனில் மணிக்கணக்கில் பேசிவிட்டு இப்போது தன்னை பிடிக்கவில்லை என்று கூறும் மாணவிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டு்ம் என முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்ல சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு மாணவி வந்துள்ளார். அப்போது அங்கு தயாராக மோகனபிரியன், மாணவியை பார்த்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகனபிரியன், கத்தியால் மாணவியை சரமாரியாக குத்திவிட்டு தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுபற்றி சேலம் டவுன் போலீசார், மோகன பிரியன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோகனபிரியன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவியை விட மோகனபிரியனுக்கு 2 வயது குறைவு. மோகனபிரியனுக்கு வேலை எதுவும் இல்லை. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி பேசி வந்துள்ளனர். ஒருமுறை மட்டும் நேரில் பார்த்து பேசியுள்ளனர். அப்போதே மாணவிக்கு மோகனபிரியனை பிடிக்கவில்லை. இதுபற்றி அவரிடம் மாணவி தெரிவித்துள்ளார். மாணவிக்கு உறவினரின் மகனை திருமணம் செய்து வைக்க பெற்றோர் செய்துள்ளனர். எனவே மாணவி, மோகன பிரியனிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் விரக்தியடைந்த மோகனபிரியன், மாணவியை பார்த்து பேச சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். மாணவி வருவதற்கு 1மணி நேரத்திற்கு முன்பே வந்து காத்திருந்துள்ளார். மாணவி வந்ததும் மோகனபிரியன் அவருடன் பேசியுள்ளார். அப்போது காதலிக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன பிரியன், தான் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த மீன் அறுக்கும் கத்தியால் மாணவியை குத்தி விட்டு தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றனர். தொடர்ந்து மோகனபிரியனிடம் சேலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

