மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வின் போது நேர்ந்த அவலங்கள்: GH-ல் அரங்கேறிய கூத்து!
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் தொண்டர்களின் நெரிசலால் நோயாளிகள் அவதிப்பட்டதோடு, மருத்துவமனை சீர்கேடுகளும் அம்பலமாகியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் இன்று உணவுத்துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சரான வெங்கட்ரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் தரம் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வந்த இந்த நிகழ்வு, துரதிர்ஷ்டவசமாக நோயாளிகளுக்குப் பெரும் அவதியையும், மருத்துவமனையின் நிர்வாகச் சீர்கேட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்வாக மாறிப்போனது.
அவசர சிகிச்சை பிரிவில் புகுந்த கூட்டம்: வீல் சேர் நோயாளிகள் தவிப்பு
அமைச்சர் வெங்கட்ரமணன் மருத்துவமனைக்கு வருகை தந்தபோது, அவருடன் அரசியல் கட்சியினர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த தொண்டர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். அமைச்சர் அவசர சிகிச்சை பிரிவு (Casualty) பகுதியை நோக்கிச் சென்றபோது, அவருடன் வந்த தவெகவினர் மற்றும் ஆதரவாளர்கள் பெரும் கூட்டமாக அவசர சிகிச்சை பிரிவுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் இப்பகுதிக்குள், அரசியல் கட்சியினர் முண்டியடித்துக் கொண்டு சென்றதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், அவசர சிகிச்சைக்காக வீல் சேரில் (Wheel Chair) கொண்டு வரப்பட்ட நோயாளி ஒருவரை உள்ளே அழைத்துச் செல்ல முடியாமல் மருத்துவமனை ஊழியர்களும், அவரது உறவினர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கட்சியினரின் கூட்ட நெரிசலால் நோயாளிக்கு உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது அங்கு நின்றிருந்த பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பாம்பு கடி நோயாளிக்கு வழிவிடாத அவலம்: ஆம்புலன்ஸை சூழ்ந்த தொண்டர்கள்
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலேயே, மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவமும் அரங்கேறியது. பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர், 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். உயிருக்குப் போராடும் நோயாளிக்கு வழிவிட வேண்டும் என்ற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இல்லாமல், அமைச்சருடன் வந்த கட்சியினர் ஆம்புலன்ஸ் வாசலை மறைத்துக்கொண்டு நின்றனர்.
ஆம்புலன்ஸிலிருந்து நோயாளியை இறக்க முயன்றபோது, கூட்டத்தினர் வழிவிடாமல் சூழ்ந்து கொண்டதால், மருத்துவமனை வளாகமே போர்க்களம் போல காட்சியளித்தது. ஊழியர்கள் சத்தமிட்டு வழி கேட்டும், அரசியல் தொண்டர்கள் நகராமல் தங்களது தலைவர்களைப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தனர். இதனால் அந்த நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பதில் கணிசமான நேரம் வீணடிக்கப்பட்டது.
படுக்கை பற்றாக்குறை: மாடிப்படிக்கு கீழே கொடூர சிகிச்சை
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் படுக்கை வசதிகள் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இன்று மருத்துவமனையில் கண்ட காட்சி ஒரு சான்றாக அமைந்தது. விஷம் அருந்திய நிலையில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் கொண்டு வரப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, மருத்துவமனையில் படுக்கைகள் ஏதும் காலியாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்த வாலிபரை மாடிப்படிக்கு கீழே உள்ள ஒரு இடத்தில் படுக்கை போட்டு சிகிச்சை அளித்தது மட்டும் இன்றி கொடுமையின் உச்சமாக, அவருக்கு செலுத்தப்பட வேண்டிய குளுக்கோஸ் மற்றும் மருந்து பாட்டில்களை மாட்டுவதற்கான 'ஸ்டாண்ட்' (Stand) கூட அங்கு இல்லை. இதனால், அந்த இளைஞரின் உறவினர் ஒருவர் மருந்து பாட்டிலை நீண்ட நேரமாகத் தனது கைகளாலேயே மேலே தூக்கிப் பிடித்தபடி நின்றிருந்தார். இத்தகைய அவசர கால சிகிச்சைக்குத் தேவையான அடிப்படை உபகரணங்கள் கூட மருத்துவமனையில் முறையாக இல்லை என்பதை அங்கிருந்த ஊழியர்களே வேதனையுடன் ஒப்புக்கொண்டனர்.
கட்டுப் போடாமல் அலட்சியம்: ஊழியர்களுடன் வாக்குவாதம்
இதற்கிடையே, மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த வார்டில் பெரும் பரபரப்பு நிலவியது. காலில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி ஒருவருக்கு, கடந்த இரண்டு நாட்களாகப் பழைய கட்டைப் பிரித்துவிட்டு, புண்ணைச் சுத்தம் செய்து புதிய கட்டுப் போடாமல் மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இதனால் கடுமையான வலியினாலும், தொற்றுக் கிருமிகள் பரவும் அச்சத்தினாலும் பாதிக்கப்பட்ட நோயாளியின் மகன், அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "அமைச்சர் வரும்போது மட்டும்தான் சுத்தம் செய்வீர்களா? இரண்டு நாட்களாக என் தந்தை வலியால் துடிக்கிறார்" என்று அவர் ஆவேசமாகக் கத்தினார். இதைப் பார்த்த அமைச்சர் வெங்கட்ரமணன், உடனே தலையிட்டு பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினரைச் சமாதானப்படுத்த முயன்றார். மேலும், அந்த நோயாளிக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
மக்களைப் பற்றி கவலையின்றி 'ரீல்ஸ்' எடுத்த காங்கிரஸ் MLA!
மருத்துவமனை முழுவதும் இத்தனை அவலங்களும், நோயாளிகளின் அழுகுரல்களும் கேட்டுக் கொண்டிருந்த வேளையில், அங்கு வந்திருந்த மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (MLA) முகமது ஜமால் யூனுஸின் செயல்பாடு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அவர் தற்போதைய சமூக வலைதள மோகத்திற்கு அடிமையாகி, ஒரு தனியார் புகைப்படக் கலைஞரை (Videographer) தனியாகத் தன்னோடு கூட்டி வந்திருந்தார். மருத்துவமனையில் மக்கள் படும் துயரங்களைத் தீர்க்க முற்படாமல், தான் ஆய்வில் ஈடுபடுவது போலவும், மக்களுக்கு உதவுவது போலவும் 'ரீல்ஸ்' (Reels) வீடியோக்கள் எடுப்பதிலேயே அவர் முழுக்கவனம் செலுத்தினார். இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி, தனது அரசியல் விளம்பரத்தைத் தேடிக் கொள்வதிலேயே அவர் குறியாக இருந்தது அங்கிருந்த மக்களிடையே பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.
"அரசு மருத்துவமனைக்கு ஏழை, எளிய மக்கள் தங்களின் உயிரைக் காக்க வருகிறார்கள். அமைச்சர்களின் ஆய்வுகள் மருத்துவமனையை மேம்படுத்த வேண்டுமே தவிர, அரசியல் கட்சியினரின் விளம்பர மேடையாகவோ அல்லது நோயாளிகளுக்கு இடையூறு விளைவிக்கும் கூட்டமாகவோ மாறக்கூடாது" என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























