மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிச் சிறுமிக்குச் செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து தற்கொலைக்குத் தூண்டிய ஆசிரியரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது பள்ளிச் சிறுமிக்குச் செல்போன் மூலம் தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து, அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன் (42) மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மாணவி தற்கொலையும் போக்சோ கைதும்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். ஆசிரியர் என்ற புனிதமான தொழிலில் இருந்துகொண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளிச் சிறுமி ஒருவருக்குத் தனது செல்போன் மூலமாகத் தொடர்ந்து ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியும், பேசியும் கடுமையான பாலியல் சீண்டல்களிலும், மன உளைச்சலிலும் ஈடுபடுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆசிரியரின் இந்தத் தொடர் பாலியல் அச்சுறுத்தலால் கடுமையான மனவேதனை அடைந்த அந்தச் சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட மகளிர் போலீசார், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியர் கார்த்திகேயனை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
எஸ்பி பரிந்துரை - கலெக்டர் அதிரடி உத்தரவு
பள்ளி மாணவிகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியரே, மாணவியைக் காமக் கண் கொண்டு பார்த்து தற்கொலைக்குத் தூண்டிய சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வருவதைத் தடுத்து, கடுமையான பாடம் புகட்ட வேண்டும் எனப் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இதனைக் கருத்தில் கொண்டு, சிறையில் இருக்கும் போக்சோ கைதி கார்த்திகேயனைத் தொடர்ந்து ஓராண்டு காலம் சிறையில் வைக்கும் வகையில், அவரை 'குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்' (Goondas Act) கீழ் சிறையில் அடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு விரிவான கோப்புடன் பரிந்துரை செய்தார்.
மாவட்ட எஸ்பி-யின் பரிந்துரையை முழுமையாகப் பரிசீலித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பொது அமைதிக்கும் மாணவிகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கிய ஆசிரியர் கார்த்திகேயனை ஓராண்டு காலத்திற்குக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க அதிரடியாக உத்தரவிட்டார்.
கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவின் நகல், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திகேயனிடம் முறைப்படி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி தலைமையிலான போலீசார், போக்சோ கைதி கார்த்திகேயனைத் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறையிலிருந்து மாற்றி, கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அங்குள்ள சிறையில் அடைத்தனர்.
போலீசாரின் கடுமையான எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிராகப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சற்றும் இரக்கமின்றி கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்குச் செல்போன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ யாரேனும் பாலியல் தொந்தரவுகள் கொடுத்தால், அதுகுறித்து மாணவிகளோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ எவ்வித பயமுமின்றி உடனடியாக மகளிர் காவல் நிலையத்தையோ அல்லது இலவச உதவி எண்களையோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும், புகாரளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியரே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் கல்வி வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















