நொறுங்கிய அரசு பேருந்துகள்! கதறிய பயணிகள்! மயிலாடுதுறையில் அதிகாலை நேர்ந்த கொடூர விபத்து!
மயிலாடுதுறை அருகே இரு அரசு பேருந்துகள் அதிகாலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஓட்டுநர்கள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே இன்று அதிகாலை இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர்கள், நடத்துநர் உட்பட 23 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 6 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி அரசு விரைவுப் பேருந்து ஒன்று இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில், மதுரையிலிருந்து பயணிகளுடன் சிதம்பரம் நோக்கி மற்றொரு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இன்று அதிகாலை மயிலாடுதுறை அருகே உள்ள கூறநாடு பகுதியில் இரு பேருந்துகளும் வந்தபோது, எதிர்பாராத விதமாக கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
விபத்தின் வீரியத்தால் இரு பேருந்துகளின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்து நொறுங்கின. பேருந்திற்குள் இருந்த பயணிகள் அனைவரும் தூக்கத்தில் இருந்ததால், விபத்தின் அதிர்ச்சியில் அலறினர். அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் திடீர் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
விரைந்து வந்த மீட்புப் படையினர்
விபத்து குறித்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மயிலாடுதுறை காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி நகல முடியாமல் தவித்த பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். விபத்தில் மொத்தம் 23 பயணிகள் காயமடைந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
6 பேருக்கு எலும்பு முறிவு: தீவிர சிகிச்சை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 பேரில், 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இடிபாடுகளில் பலமாகச் சிக்கியதால் அவர்களுக்கு கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு பேருந்துகளின் ஓட்டுனர், நடத்துநர் மற்றும் பயணிகள் 2 பேர் என 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்
"படுகாயமடைந்த ஆறு நபர்களுக்கும் கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவு (Fracture) ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், லேசான மற்றும் சிறு காயமடைந்த மற்ற 17 பயணிகளுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒரு சில பயணிகள் தங்களது விருப்பத்தின் பேரில் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அனுமதித்துக் கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு & போலீஸ் விசாரணை
அதிகாலையில் இரு பேருந்துகள் சாலையின் நடுவே மோதி நின்றதால், மயிலாடுதுறை - சிதம்பரம்/கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக விபத்துக்குள்ளான பேருந்துகளை கிரேன் உதவியுடன் சாலையோரமாக அகற்றி, போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட ஓட்டுநர்களின் தூக்கக் கலக்கம் விபத்திற்கு காரணமா என்பது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























