கொடுத்ததை திரும்ப கேட்ட மனைவி.. நாத்தனாருடன் சேர்ந்து போட்டு தள்ளிய கணவன்!
டிசம்பர் 27ம் தேதி சனிக்கிழமை மீண்டும் கல்பனா, மகேஷ் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது கல்பனா தான் வீட்டை விட்டு வெளியே செல்வதாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் 35 வயது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் நாத்தனார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் பால்கர் என்ற இடத்தில் தான் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்பனா சோனி என்ற கொலை செய்யப்பட்ட அந்த பெண் தனது மாமியார் மற்றும் அவரது கணவரிடமிருந்து தான் கொடுத்த பரிசுகளை திரும்ப கேட்டதால் இந்த படுகொலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மகேஷ் சோனி என்பவரை 2015ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். கல்பனா தனது கணவர் மற்றும் மாமியாருடன் விரா பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் மாமியார் மற்றும் அவரது உறவினர்களால் கல்பனா சோனி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன், மனைவுஇ இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிசம்பர் 27ம் தேதி சனிக்கிழமை மீண்டும் கல்பனா, மகேஷ் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது கல்பனா தான் வீட்டை விட்டு வெளியே செல்வதாக தெரிவித்துள்ளார். எனவே திருமணத்தின் போது எனது பெற்றோரிடமிருந்து வாங்கிய அசையும், அசையா சொத்துகள் கொண்ட வரதட்சணை பொருட்களை திரும்ப தருமாறு கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த மகேஷ் மற்றும் அவரது சகோதரி தீபாலி சோனி, கல்பனாவின் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ரத்த வெளத்தில் அவர் சரிந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக மகேஷ் வீட்டுக்கு சென்றனர். அங்கு ரத்த காயத்துடன் கல்பனா மயங்கி கிடைந்தார். என்ன நடந்தது என அக்கம் பக்கத்தினர் கேட்கையில் கழிவறையில் தவறி விழுந்ததால் கல்பனா படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கல்பனாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் இணைந்து கூட்டிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கல்பனா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவரின் உடலில் கடுமையான காயம் இருந்ததால் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கல்பனா கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
உடனடியாக அப்பகுதியின் எல்லைக்குட்பட்ட காவல்துறையினர் கொலை பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். மகேஷ் மற்றும் தீபாலி இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். 2026ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி வரை இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். இந்த நிலையில் மகேஷ், கல்பனா தம்பதியினருக்கு 7 வயதான மகள் உள்ளார். இப்போது அச்சிறுமி தனித்து விடப்பட்டுள்ளார். அவர் தற்போது கல்பனாவின் தாயார் வீட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















