மதுரையின் பிரபல ரவுடி சிவமணி படுகொலை! கூட்டாளிகள் கைது - கொலையின் பின்னணி என்ன?
மதுரை ரவுடி வத்தலகுண்டுவில் கழுத்தறுத்து கொலை. கூட்டாளிகளே கொலை செய்து சாலையோரம் உடலை வீசி, தலையில் கல்லைப் போட்டு சிதைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி கழுத்தை அறுத்து பின்பு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ரவுடி வத்தலகுண்டுவில் கழுத்தறுத்து கொலை கொலை செய்யப்பட்டார். கூட்டாளிகளே கொலை செய்து சாலையோரம் உடலை வீசி, தலையில் கல்லைப் போட்டு சிதைத்து விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சிவமணி (27) சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான சிவமணி தனக்கு கீழ் சில ரவுடிகளை வைத்து மதுரையில் தாதாவாக செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு கீழ் உள்ள ரவுடிகளை இழிவாகவும் மரியாதை குறைவாகவும் நடத்தி, அவர்களை அடிமை போல் செயல்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ரவுடி சிவமணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, ரவுடி சிவமணியிடம் நைசாக பேசி கொடைக்கானல் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இதன்படி இவரது நண்பர்களும் கூட்டாளிகளுமான 5 பேர், மதுரையில் இருந்து ஒரு ஸ்கார்பியோ காரில், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு வழியாக கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ளனர். காரில் செல்லும்போது மது போதையில் இருந்த, இவர்கள், வத்தலகுண்டு மதுரை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, மது போதையில் இருந்த சிவமணியை காருக்குள் வைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, அவரது உடலை வத்தலகுண்டு எழில் நகரில் சாலையில் வீசி உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பிறகும் ஆத்திரம் அடங்காமல் சிவமணி முகத்தில் கல்லை தூக்கி போட்டு முகத்தை சிதைத்து விட்டு கொலையாளிகள் அங்கிருந்து கார் டிரைவர் உட்பட ஐந்து பேர் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, சப்-இன்ஸ்பெக்டர் ஷேக்அப்துல்லா தலைமையிலான காவல்துறையினர் பிரபல ரவுடி ஜெய்ஹிந்த்புரம் சிவமணி உடலை கைப்பற்றி பிரரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு காவல்துறையினர், சிவமணியை கொலை செய்த ரவுடிகளும் அவரது நண்பருளுமான 5 பேரை, தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




















