![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
விழுப்புரம்: திண்டிவனத்தில் தம்பதியை அடைத்து வைத்து கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை
’’கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 15 லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது’’
![விழுப்புரம்: திண்டிவனத்தில் தம்பதியை அடைத்து வைத்து கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை In Tindivanam, the couple was stabbed at the tip of a knife and robbed of jewelery money விழுப்புரம்: திண்டிவனத்தில் தம்பதியை அடைத்து வைத்து கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/29/2ae0faea382c6dbadd5a2e271442ac30_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காமராஜர்நகர் அய்யந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு சக்திவேல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். நேற்று அதிகாலை முகமூடி அணிந்த 4 பேர் சக்திவேலின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த முகமூடி கொள்ளை கும்பலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் திருடன்... திருடன்...என்று அலறினர். அந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரும் சக்திவேலின் மனைவி மற்றும் 3 குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பின்னர் அவர்கள் சக்திவேலிடம் வீட்டில் நகை- பணம் வைத்திருக்கும் அறைக்கு அழைத்து செல்லும் படி கூறினர். இதில் பயந்துபோன சக்திவேல் அவர்களை பீரோ இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார்.
உடனே அந்த கொள்ளை கும்பல் பீரோவை திறந்து அதில் இருந்த 20 சவரன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்தனர். பின்னர் சக்திவேலின் குடும்பத்தினரை முகமூடி கொள்ளையர்கள் ஒரு அறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் கொள்ளையடித்த நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு 15 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
கொள்ளை கும்பலால் அடைத்து வைக்கப்பட்ட சக்திவேலின் குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சக்திவேலின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சக்திவேலின் குடும்பத்தினர் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். உடனே அவர்களை பொதுமக்கள் மீட்டனர்.
இதுகுறித்து ரோசனை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர் சக்திவேல் மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த வீட்டிற்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். வீடு புகுந்து கத்தி முனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். இந்த தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். மேலும் இரவு நேரங்களில் போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை- பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)