29 வகை வெளிநாட்டு மதுபானம்... தேர்தல் ரெய்டில் சிக்கிய லக்சுரி கார்...
சொகுசு காரில் இருந்த வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல். தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி..

கோவை, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திங்களன்று நடத்திய வாகன சோதனையில், அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 29 வகையான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சொகுசு காரில் மதுபானம் பறிமுதல், டிரைவர் கைது
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் நஞ்சுண்டாபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் உரிய ஆவணங்களின்றி 29 வகையான வெளிநாட்டு ரக மதுபானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் ஜோத்தீஸ்வரன் என்பவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் சென்னை சில்க்ஸ் உரிமையாளரின் தனிப்பட்ட கார் ஓட்டுநர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் சொகுசு காருடன் ஓட்டுநர் ஜோத்தீஸ்வரனை போத்தனூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






















